Published : 19 Jun 2020 07:37 PM
Last Updated : 19 Jun 2020 07:37 PM

வந்தே பாரத்; 1 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் நாடு திரும்பினர்

வந்தே பாரத் விமானங்கள் மூலம் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்

வந்தே பாரத் விமானங்கள் மூலம், ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்று மிகப்பெரும் வெளியேற்றத்துக்கு காரணமாகியுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தங்கள் குடும்பத்துடன் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வந்த இந்தியர்களை ஏர் இந்தியா விமானங்கள் மூலம் தாயகம் கொண்டு வருவதற்காக மத்திய அரசு வந்தே பாரத் இயக்கத்தைத் தொடங்கியது. வந்தே பாரத் விமானங்கள் மூலம், ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதல் முறையாக, துபாயிலிருந்து 188 பயணிகளுடன் ஒரு விமானம் திருச்சி விமானநிலையத்தில் ஜூன் 18-ம் தேதி வந்திறங்கியுள்ளது. மேலும், மஸ்கட்டில் இருந்து 171 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஓமனிலிருந்து திருச்சிக்கு மற்றொரு விமானம் வந்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், சிறப்பு விமானங்களை இயக்கி சிங்கப்பூரிலிருந்து 179 இந்தியர்களை அழைத்து வந்துள்ளது. மற்றுமொரு விமானம் மாலே வேலனா விமான நிலையத்திலிருந்து திருச்சிக்கு 170 பயணிகளை அழைத்து வந்தது. கொவிட்-19 பொது முடக்கத்தின் ஒரு பகுதியாக, மார்ச் 25-ம் தேதி முதல், சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஜூன் 1 முதல் சில கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி, சர்வதேச விமானங்கள் இயக்கம் மீண்டும் துவங்கியது.

இந்த வெளியேற்றத்தின் மூலம், நாடு திரும்புபவர்கள் கோவிட்-19 தொற்றைப் பரப்பி விடாமல் இருப்பதை உறுதி செய்வதும் முக்கியமாகும். ஆகவே, விமானங்கள் மூலம் இந்தியா திரும்புபவர்களுக்கு கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் திருச்சி வரும் அனைத்து பயணிகளுக்கும் வெப்பமானி சோதனை செய்யப்பட்டு, அவர்களது மாதிரிகள் கொவிட்-19 பரிசோதனைக்காக எடுக்கப்படுகின்றன. உடல் வெப்பம் அதிகமாக இருந்து, மேலும் அறிகுறிகள் தென்பட்டால், அத்தகைய பயணிகள் உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

7 நாட்களுக்கு தனிமைப்படுத்துதல் முகாமில் சொந்தச் செலவில் தங்கியிருக்க வேண்டும். ஏழு நாட்களுக்குப் பிறகு, மேலும் சோதனை நடத்தப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் வீடுகளுக்குத் திரும்பி மேலும் ஏழு நாட்களுக்கு அங்கேயே தனிமையில் இருக்க வேண்டும். பிற மாவட்டங்களிலிலிருந்து வருபவர்களுக்கு கொவிட்-19 அறிகுறிகள் இல்லையென்றால், அவர்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x