Published : 19 Jun 2020 02:04 PM
Last Updated : 19 Jun 2020 02:04 PM
ஜம்மு காஷ்மீரில் சோபியான், புல்வாமா ஆகிய இரு மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் நேற்றிலிருந்து நடத்திய என்கவுன்ட்டரில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று பாதுகாப்புப் படை வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ''தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் பாம்போர் பகுதியில் உள்ள மீஜ் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.
பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளதை அறிந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்ததில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். மற்ற இரு தீவிரவாதிகள் அருகே இருக்கும் மசூதிக்குள் தஞ்சமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் நேற்று இரவு முழுவதும் தீவிரவாதிகள் வெளியே வந்தபின் தாக்குதல் நடத்த பொறுமை காத்தனர்.
இன்று காலை தீவிரவாதிகளை மசூதியிலிருந்து வெளியே வரவழைக்க கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியதில் தீவிரவாதிகள் இருவரும் மசூதியை விட்டு வெளியே வந்தனர். அப்போது இரு தீவிரவாதிகளும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்'' என்று தெரிவித்தனர்.
இது தொடர்பாக காஷ்மீர் காவல் ஐஜி விஜய் குமார் கூறுகையில், ''மசூதியிலிருந்து தீவிரவாதிகளை வெளியே கொண்டுவருவதற்கு கண்ணீர் புகைக்குண்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. துப்பாக்கிச் சூடு ஏதும் மசூதிக்குள் நடத்தப்படவில்லை. பாதுகாப்புப் படையினர் பொறுமையாக இருந்து நடவடிக்கை எடுத்தார்கள்.
மசூதியின் புனிதத்தன்மை காக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளை வெளியே வரவழைத்து என்கவுன்ட்டர் செய்தனர்'' எனத் தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையின் செய்தித்தொடர்பாளர் கர்னல் கலியா நிருபர்களிடம் கூறுகையில், “சோபியான் மாவட்டத்தில் உள்ள முனாத்-பாந்த்பாவா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் இன்று காலை இறங்கினர்.
இந்தத் தேடுதல் வேட்டையில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினர் தரப்பிலும் பதிலடி தரப்பட்டதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
வியாழக்கிழமை இதே பகுதியில் தீவிரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். ஒட்டுமொத்தமாக நேற்று இரவு முதல் இன்றுகாலை வரை சோபியான், புல்வாமா மாவட்டத்தில் நடந்த இரு என்கவுன்ட்டரில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த ஆண்டில் இதுவரை 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டது குறித்து பாதுகாப்புப் படையினருக்கு காஷ்மீர் போலீஸ் ஐஜி விஜயகுமார் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT