Published : 17 Jun 2020 09:35 PM
Last Updated : 17 Jun 2020 09:35 PM

கரோனாவால் வெளிநாடு வாழ் மலையாளிகள் அதிகம் பேர் மரணம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி 

கரோனாவால் வெளிநாடு வாழ் மலையாளிகள் அதிகம் பேர் மரணம் அடைந்துள்ளதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் புதன்கிழமை நிருபர்களிடம் கூறியது:

’’நமது எல்லையில் நாட்டுக்காகப் போராடி வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன். அவர்களது குடும்பத்தினரின் துக்கத்தில் கேரளாவும் பங்கு கொள்கிறது. கேரளாவில் இன்று 75 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

90 பேர் இன்று ஒரே நாளில் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை கேரளாவில் கரோனா பாதித்து 20 பேர் மரணமடைந்துள்ளனர். ஆனால் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் கரோனாவுக்கு பலியாகும் மலையாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் நேற்று வரை 277 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர். இன்று டெல்லியில் ஒரு மலையாளி நர்ஸ் இறந்துள்ளார்.

இதன் மூலம் கரோனா வைரசின் தாக்கம் மிக அதிகமாகி வருகிறது என்பதை நாம் உணர வேண்டும். இன்று நோய் பாதித்தவர்களில் 53 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 19 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 3 பேருக்கு நோய் பரவி உள்ளது.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தும், 5 பேர் டெல்லியில் இருந்தும், 4 பேர் தமிழ்நாட்டில் இருந்தும், தலா ஒருவர் ஆந்திரா மற்றும் குஜராத்தில் இருந்தும் வந்துள்ளனர். இன்று நோய் குணமடைந்தவர்களில் ஆலப்புழாவைச் சேர்ந்த 16 பேரும், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேரும், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 24 பேரும், திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேரும், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேரும், பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேரும், கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரும், எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரும், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேரும், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் உள்ளனர்.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேரும், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேரும், காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேரும், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேரும், பாலக்காடு மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 6 பேரும், எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேரும், திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரும், கோட்டயம் மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 4 பேரும், வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரும், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவரும் உள்ளனர்.

இதுவரை 5,876 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை கேரளாவில் 2,697 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 1351 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் 1,25,307 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1989 பேர் மருத்துவமனையில் உள்ளனர். இன்று கரோனா அறிகுறிகளுடன் 203 பேர் பல்வேறு மருத்துமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,22,466 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதில் 3,019 பரிசோதனை முடிவுகள் வர உள்ளன. சுகாதாரத் துறையினர், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 33,559 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 32,300 பேருக்கு நோய் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது 110 நோய் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன’’.

இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x