Last Updated : 16 Jun, 2020 02:02 PM

 

Published : 16 Jun 2020 02:02 PM
Last Updated : 16 Jun 2020 02:02 PM

லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் மோதல்; இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் உயிரிழப்பு: ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை - சீனா குற்றச்சாட்டு

கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் நேற்று இரவு இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் நடந்தது. சீன ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியத் தரப்புக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதம் போல் சீன ராணுவத்துக்கும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லடாக் எல்லையில் ஏற்கெனவே இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடைேய சாலை அமைப்பது தொடர்பாக எழுந்த மோதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கடந்த வாரம் சுமுக நிலை எட்டப்பட்டது. இந்தச் சூழலில் இந்திய வீரர்கள் 3 பேர் சீன வீரர்களால் கொல்லப்பட்டிருப்பது மேலும் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

சீன ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்குப் பதில் நடவடிக்கை ஏதும் வேண்டாம், அது மேலும் நிலைமையை மோசமாக்கும் என்று சீன வெளியுறவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவனத்தின் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சீன எல்லைக்குள் அத்துமீறிய அதிகாரிகளை இந்திய வீரர்கள் தாக்கியதாக சீன ராணுவம் புதிய குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரி பிபின் ராவத், முப்படைத் தளபதிகள், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்திய- சீன எல்லைப்பகுதியில் உள்ள 3,500 கி.மீ. பகுதி இன்னும் வரையறுக்கப்படவில்லை. இதனால் லடாக், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், திபெத் ஆகிய எல்லைப் பகுதிகளில் சீனா அவ்வப்போது படைகளைக் குவித்து இந்தியாவுக்குத் தொல்லை கொடுத்து வருகிறது.

குறிப்பாக லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த மாதம் 2,500க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் குடில் அமைத்துத் தங்கினர். போர்ப்பயிற்சியிலும் ஈடுபடுவதும், பதுங்குக் குழிகள் அமைப்பதிலும் இருந்தனர். இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவமும் படைகளைக் குவித்தது. இதனால் பதற்றமான சூழல் நிலவியது.

இருதரப்புப் பிரச்சினையைத் தீர்க்க ராணுவக் கமாண்டர்கள் மட்டத்தில் இரு தரப்பு ராணுவத்தினரும் 12 முறை பேச்சுவார்த்தை நடத்தினர், ராணுவ மேஜர் அளவிலான பேச்சுவார்த்தை 3 முறை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததையடுத்து, இந்தியா,சீனா வெளியுறவு அதிகாரிகள் மட்டத்தில் கடந்த 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் கல்வான் பள்ளாத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து இரு நாடுகளும் ராணுவத்தை திரும்பப் பெற முடிவு செய்து அதற்கான பணியில் இருந்தபோது இந்தத் தாக்குதலை சீன ராணுவம் நிகழ்த்தியுள்ளது. எல்லைப் பிரச்சினையில் சுமுகமான சூழல் எட்டியிருந்த நிலையில் சீன ராணுவம் செய்த இந்தச் செயல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x