Published : 11 Jun 2020 05:51 PM
Last Updated : 11 Jun 2020 05:51 PM

வடகிழக்கு மாநிலங்களில் இயற்கை விவசாயம் ஒரு மிகப்பெரும் இயக்கமாக மாறும்: பிரதமர் மோடி நம்பிக்கை

கோப்புப் படம்

புதுடெல்லி

வடகிழக்கு மாநிலங்களில் இயற்கை விவசாயம் ஒரு மிகப்பெரும் இயக்கமாக மாறும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய வர்த்தக சங்கத்தின் 95 ஆவது ஆண்டு நிறைவுக் கூட்டத்தில், இன்று காணொலி மாநாட்டின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது வேளாண்துறையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்கை முடிவுகள் குறித்துப் பேசிய பிரதமர், பல ஆண்டுகளாக கட்டுப்படுத்தி வைத்திருந்த தளைகளிலிருந்து வேளாண் பொருளாதாரம் விடுவிக்கப்பட்டுள்ளது என்றார். இப்போது இந்திய விவசாயிகள் தங்களது வேளாண் விளைபொருள்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விற்கும் உரிமை பெற்றுள்ளனர் என்றார்.

உள்ளூர் உற்பத்திக்காக தற்போது அரசு மேற்கொண்டு இருக்கின்ற தொழில் தொகுப்பு என்ற அணுகுமுறையானது அனைவருக்குமான வாய்ப்பை வழங்கும் என்று பிரதமர் மேலும் தெரிவித்தார். இவற்றோடு தொடர்புடைய தொழில் தொகுப்புகள் அவை ஏற்கெனவே உருவான மாவட்டங்கள், ஒன்றியங்கள் நிலையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

இதனோடு சேர்த்து மூங்கில் மற்றும் இயற்கை விவசாயப் பொருள்களுக்கான தொழில் தொகுப்புகளும் ஏற்படுத்தப்பட வேண்டும், சிக்கிமைப் போன்று ஒட்டுமொத்த வடகிழக்குப் பிராந்தியமும் இயற்கை விவசாயத்திற்கான மிகப்பெரும் மையமாக மாறவேண்டும் என்றும் பிரதமர் கூறினார். இயற்கை விவசாயத்திற்கு சர்வதேச அடையாளம் கிடைத்தால் வடகிழக்குப் பிராந்தியத்தில் இயற்கை விவசாயம் ஒரு மிகப்பெரும் இயக்கமாக மாறுவதோடு சர்வதேச சந்தையில் முன்னணியிலும் இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x