Last Updated : 11 Jun, 2020 04:07 PM

 

Published : 11 Jun 2020 04:07 PM
Last Updated : 11 Jun 2020 04:07 PM

பால்கரில் சாதுக்கள் கொல்லப்பட்டதில் சிபிஐ, என்ஐஏ விசாரணை கோரி மனு: மகாராஷ்டிர அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

கோப்புப்படம்

புதுடெல்லி

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் இரு சாதுக்கள் உள்பட 3 பேர் கடந்த ஏப்ரல் மாதம் கும்பலால் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் சிபிஐ மற்றும் என்ஐஏ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் மகாராஷ்டிர அரசு பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை காண்டிவாலி பகுதியைச் சேர்ந்த சாதுக்கள் சிக்னே மகராஜ் கல்பவிருக்சகிரி (வயது 70), சுஷில் கிரி மகராஜ் (வயது 35) ஆகியோர் ஓட்டுநர் நிலேஸ் டெல்கடே (வயது 30) உடன் சேர்ந்து குஜராத் மாநிலம் சூரத்தில் நிகழ்ந்த ஒரு இறுதிச்சடங்கிற்கு காரில் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி சென்றனர்.

அப்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது. 5 பேருக்கு மேல் கூடவும் அனுமதியில்லை. இந்த சூழலில் பால்கர் மாவட்டம், கட்சின்சிலே கிராமத்தில் கார் வந்தபோது, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், கும்பலாகச் சேர்ந்து சாதுக்கள் சென்ற காரை மறித்து அவர்களைத் தாக்கினர். இந்தத் தாக்குதலில் கார் ஓட்டுநர் உள்பட சாதுக்கள் இருவரும் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது கடும் விமர்சனங்களை வைத்ததாக ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த சூழலில் பால்கரில் சாதுக்கள் கும்பல் கொலை தொடர்பாக சிபிஐ, என்ஐஏ விசாரணை செய்ய உத்தரவிடக் கோரி ஸ்ரீ பஞ்ச் தஸ்பன் ஜூனா அகாரா என்ற சாதுக்கள் அமைப்பும், கன்யாசம் உபாத்யாயே எனும் அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தன.

இதில் சிபிஐ விசாரணை கோரி கடந்த மே 1-ம் தேதி ஸ்ரீ பஞ்ச் தஸ்பன் ஜூனா அகாரா அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பால்கர் சாதுக்கள் கொலை குறித்த முழுமையான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய மகாராஷ்டிர அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, கன்யாசம் உபாத்யாயே அமைப்பு மனுத்தாக்கல் செய்தது.

அந்த மனுவில், “பால்கர் சாதுக்கள் கொலை வழக்கை மகாராஷ்டிர போலீஸார் விசாரித்தால் உண்மைக் குற்றவாளி கண்டுபிடிக்கப்படமாட்டார்கள். ஊரடங்கு அமலில் இருந்தபோது பெரிய கும்பல் சேர்ந்து இந்த கொலையைச் செய்துள்ளது. போலீஸாரும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்தார்கள் என்பதை பல்வேறு வீடியோ காட்சிகள் தெளிவுபடுத்துகின்றன.

இந்தச் சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பினாலும் எதற்கும் விடையில்லை. ஆதலால் என்ஐஏ , சிபிஐ விசாரிணைக்கு உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், எம்ஆர் ஷா, ராமசுப்பிரமணியன் ஆகியோர் அமர்வில் காணொலி மூலம் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஜூலை 2-ம் வாரத்துக்குள் இந்த மனுவுக்குப் பதில் அளிக்கக் கோரி மகாராஷ்டிர அரசுக்கு உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x