Published : 29 May 2020 01:38 PM
Last Updated : 29 May 2020 01:38 PM

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங்க வாய்ப்பு: சுட்டெரிக்கும் வெயில் குறையும்

தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1-ம் தேதி தொடங்குவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் கடுமையான கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

மேற்குதிசை காற்று வலுவடைந்து வருவதாலும், வெப்பச்சலன மேகங்கள் அதிகரிப்பதாலும் மாலத்தீவுகள்-கன்னியாகுமரியின் சில பகுதிகள், வங்காள விரிகுடாவின் தெற்குப் பிராந்தியத்தின் சில பகுதிகள், அந்தமான் கடலின் எஞ்சிய பகுதிகள் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை முன்னேறி வருகிறது.

அடுத்த 48 மணி நேரத்தில் மாலத்தீவு-கன்னியாகுமரியின் மேலும் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னோக்கி நகர்வதற்கான சாதகமான சூழல்கள் நிலவி வருகிறது.

அரபிக் கடலின் தென்கிழக்கு & அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 31 மே முதல் 4 ஜுன் 2020 வரை ஏற்படலாம். இதன் காரணமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழையானது 1, ஜுன் 2020 முதல் தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாகி உள்ளதாக வானிலை மையம் ஏற்கெனவே தெரிவித்து இருந்தது.

ஆனந்த் சர்மா

இந்தநிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குநர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளதாவது:

தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1-ம் தேதி தொடங்குவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவிலும் முதல் வாரத்தில் மழை தொடங்குவதற்கான சூழல் உருவாகி வருகிறது. இதனால் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வீசி வரும் வெப்ப அலை கணிசமாக குறையும். இதமான சூழல் உருவாகும். வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x