Published : 24 Aug 2015 11:20 AM
Last Updated : 24 Aug 2015 11:20 AM
சர்வதேசப் பொருளாதார நிலையில் குறிப்பாக சீன பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையின் தாக்கமாக இந்திய பங்கு சந்தைகள் மிக கடுமையான சரிவை கண்டன.
பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் தொடங்கிய போதே கடும் சரிவு நிலவியது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1098 புள்ளிகள் சரிந்து 26,359 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகம் தொடங்கியது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 8000 புள்ளிகளிலிருந்து 7990.90 ஆக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
சீனாவின் ஷாங்காய் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவின் தாக்கம் ஆசிய பங்குசந்தைகளிலும் எதிரொலித்தன. வாரத்தின் தொடக்க நாளே பங்குசந்தையில் ஏற்பட்டுள்ள கடுமையான சரிவு முதலீட்டாளர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
ஐசிஐசிஐ, இன்ஃபோசிஸ், ஆக்சிஸ் பாங்க், ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன.
ரூபாயின் மதிப்பும் கடும் சரிவு
கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66 காசுகள் சரிந்து ரூ.66.50 எனும் நிலையை அடைந்தது.
கடந்த சில வாரங்களாக சீனாவின் யுவான் மதிப்பு கடுமையாக சரிந்ததாலும், உலகளவில் டாலரின் மதிப்பு அதிகரித்திருப்பதும் ரூபாயின் மதிப்பில் கடும் சரிவை சந்தித்து இருக்கிறது. உலக சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாகவே இந்திய பங்குச்சந்தையில் இத்தகைய தாக்கம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT