Published : 17 May 2020 05:52 PM
Last Updated : 17 May 2020 05:52 PM
லாக்டவுனால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க அறிவிக்கப்பட்டுள்ள தற்சார்பு பொருளாதாரத் திட்டத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் கோடி என்று மத்திய அரசு மக்களைத் தவறாக வழிநடத்துகிறது. உண்மையில் மொத்த மதிப்பே ரூ.3.22 லட்சம் கோடிதான் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சுயசார்பு பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார். சுயசார்பு பொருளாதாரத்துக்காக இதுவரை ஐந்து கட்டங்களாகத் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
அவற்றின் மொத்த மதிப்பு ரூ.11 லட்சத்து 2 ஆயிரத்து 650 கோடியாகும். ரிசர்வ் வங்கி அளித்துள்ள சலுகைகளின் மதிப்பு ரூ.8 லட்சத்து ஆயிரத்து 603 கோடிக்குத் திட்டங்களை அறிவித்துள்ளதால் ஒட்டுமொத்தமாக ரூ.20.97 லட்சத்துக்குத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால், ரூ.20 லட்சம் கோடிக்குத் திட்டங்கள் இல்லை. திட்டங்களின் மொத்த மதிப்பே ரூ.3.22 லட்சம் கோடிதான் என காங்கிரஸ் மூத்த செய்தித்தொடர்பாளரும், முன்னாள் வர்த்தகத்துறை அமைச்சருமான ஆனந்த் சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் அவர் காணொலி மூலம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஏழைகள் கைகளில் பணத்தை வழங்கி, அதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்தால்தான் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் இயல்புப் பாதைக்குக் கொண்டுவர முடியும்.
பொருளாதார உந்துசக்திக்கு மீட்புத் திட்டங்களை அறிவிப்பதற்கும், மக்களுக்குக் கடன் கொடுப்பதற்கும், நிறுவனங்களுக்குக் கடன் கொடுப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது.
மத்திய அரசு கடந்த சில நாட்களாக அறிவித்த பொருளாதார நிதித்தொகுப்பின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.3.22 லட்சம் கோடிதான். அதாவது நாட்டின் ஜிடிபியில் 1.6 சதவீதம்தான். பிரதமர் மோடி சொல்வதுபோல் அந்தத் திட்டங்களின் மதிப்பு ரூ.20 லட்சம் கோடி இல்லை.
நான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குச் சவால் விடுக்கிறேன். பிரதமர் மோடி அறிவித்த திட்டங்கள் மீது எனக்கு உடன்பாடு இல்லை. பொருளாதார நிதித்தொகுப்பு தொடர்பாக நான் தரும் புள்ளிவிவரங்களை மத்திய அரசு தவறு என நிரூபிக்க முடியுமா? அதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னுடன் வாதிடத் தயாரா?
நான் கேட்கும் கேள்விகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்க வேண்டும். அவர் கேள்வி எழுப்பக்கூடாது. மத்திய அரசின் சரியான திட்டமிடல் இல்லாததால், சாலையில் நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், இந்த தேசத்தகு்கும் மத்திய அரசு பதிலையும், விளக்கத்தையும் அளிக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகளை அற்பமானவர்கள் என நிதியமைச்சர் கூறுகிறார்கள். ஆனால், இந்த தேசம் நிதியமைச்சரிடம் இருந்து மிகவும் தீவிரமான, பொறுப்பான, மரியாதைக்குரிய பதிலை எதிர்பார்க்கிறது. ஏழை மக்களின் அடிப்படை உரிமைகளையும், சட்ட உரிமைகளையும் அழித்தமைக்காக மத்திய அரசு ஏழை மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்''.
இவ்வாறு ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT