Last Updated : 12 May, 2020 10:48 AM

 

Published : 12 May 2020 10:48 AM
Last Updated : 12 May 2020 10:48 AM

இந்தியாவில் கரோனா பாதிப்பு 70 ஆயிரத்தைக் கடந்தது: 24 மணிநேரத்தில் 3,600 பேருக்கு தொற்று; 2-வது இடத்தை நோக்கி நகர்கிறதா தமிழகம்?

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு 3,604 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 87 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவி்த்துள்ளது.

இந்தியாவில் கரோனாவின் ஒட்டுமொத்த பாதிப்பு 70 ஆயிரத்தைக் கடந்து, 70 ஆயிரத்து 756 ஆக அதிகரித்துள்ளது. 22 ஆயிரத்து 454 பேர் இதுவரை குணமடைந்து சென்றுள்ள நிலையில், மருத்துவமனைகளில் 46 ஆயிரத்து 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புகளைப் பொறுத்தவரை 2 ஆயிரத்து 293 ஆக அதிகரித்துள்ளது.

திங்கள்கிழமை மாலை வரை 87 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அதில் 36 பேர் மகாராஷ்டிராவிலும், 20 பேர் குஜராத்திலும் உயிரிழந்துள்ளனர். தமிழகம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசத்தில் தலா 6 பேர், மேற்கு வங்கத்தில் 5 பேர், ஹரியாணா, ஜம்மு காஷ்மீரில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று 36 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 868 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் நேற்று 20 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 513 ஆக அதிகரித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 221 ஆக அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில் 5 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் உயிரிழப்பு 73 ஆக தொடர்கிறது. ராஜஸ்தானில் 6 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 30 ஆகத் தொடர்கிறது. உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 80 ஆகவும், ஆந்திராவில் 45 ஆகவும் இருக்கிறது. கர்நாடகா, பஞ்சாப்பில் தலா 31 பேர் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர், ஹரியாணாவில் தலா 10 பேரும், பிஹாரில் 6 பேரும், கேரளாவில் 4 பேரும், ஜார்க்கண்ட், ஒடிசாவில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் 2 பேரும், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,401 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 4,786 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து குஜராத்தில் 8,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 8,002 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 2,501 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்துக்கும் குஜராத் மாநிலத்துக்கும் பாதிப்பு எண்ணிக்கையில் ஏறக்குறைய 500 வித்தியாசம் இருந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் குஜராத்தைப் பின்னுக்குத் தள்ளி 2-ம் இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவதாக டெல்லியில் 7,233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,129 பேர் குணமடைந்துள்ளனர். ராஜஸ்தானில் 3,988 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 3,785 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 3,573 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் 2,063 பேரும், ஆந்திராவி்ல் 2018 பேரும், பஞ்சாப்பில் 1877 பேரும், தெலங்கானாவில் 1,275 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 879 பேர், கர்நாடகாவில் 862 பேர், ஹரியாணாவில் 730 பேர், பிஹாரில் 747 பேர், கேரளாவில் 519 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 489 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 414 பேர், சண்டிகரில் 174 , ஜார்க்கண்டில் 160 பேர், திரிபுராவில் 152 பேர், அசாமில் 65 பேர், உத்தரகாண்டில் 68 பேர், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசத்தில் தலா 59 பேர், லடாக்கில் 42 பேர், மேகாலயாவில் 13 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 6 பேர் குணமடைந்தனர்.

மணிப்பூர், மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவு, கோவாவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை.''

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x