Last Updated : 08 May, 2020 06:47 PM

 

Published : 08 May 2020 06:47 PM
Last Updated : 08 May 2020 06:47 PM

குஜராத்தில் சிக்கியுள்ள மூன்று மகள்களை மீட்டுக்கொடுங்கள்: மத்தியப் பிரதேச தம்பதி கண்ணீர் பேட்டி

குஜராத்தில் சிக்கியுள்ள மூன்று மகள்களை மீட்டுக்கொடுங்கள் என்று மத்தியப் பிரதேச தம்பதியர் நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் மார்ச் 24-ம் தேதி அன்று தொடங்கிய லாக்டவுன் தற்போது மூன்றாவது முறையாக மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஏராளமான கண்ணீர்க் கதைகள் வலம் வரத் தொடங்கின. வாகனங்களிலோ, நடந்தோ எப்பாடுபட்டாவது சொந்த இடங்களுக்கு திரும்பிவிட்டவர்கள் ஒருபக்கம் என்றாலும் சொந்த இடங்களுக்குச் செல்ல இயலாமல் இன்னொரு பக்கம் பணியிடங்களில் சிக்கிக்கொண்டவர்கள் ஏராளம்.

தற்போது அனைத்துப் பகுதிகளில் இருந்தும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் லாக்டவுனுக்கு முன்னரே பிரிந்துவிட்ட மத்தியப் பிரதேச குடும்பத்தின் கதை மிகவும் சோகமானது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களான சுமித்ரா பாய் மற்றும் அவரது கணவர் இருவரும் குஜராத்தில் உள்ள அம்ரேலியில் தங்கள் குடும்பத்துடன் தங்கிப் பணியாற்றி வந்தனர். தன் மகனுக்கு திடீரென உடல்நலம் குன்றிய நிலையில் இந்தூரில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக தம்பதியர் ஊர் திரும்பினர். ஆனால் இவர்களது மூன்று மகள்களும் அம்ரேலியிலேயே தங்கிவிட்டனர். அவர்கள் செய்துகொண்டிருந்த வயல் வேலைதான் இதற்குக் காரணம். இந்நிலையில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் சுமித்ரா பாயின் மூன்று மகள்களும் எங்குமே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து லாக்டவுனில் சிக்கிய மகள்களின் தாயான சுமித்ரா ஏஎன்ஐயிடம் கூறுகையில், ''எனது மூன்று மகள்களும் குஜராத்தில் இருக்கின்றனர். எனது இளைய மகன் உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக அனுமதிக்க இந்தூர் வந்துவிட்டோம். தற்போது சிகிச்சை பெற்றாகிவிட்டது. இளைய மகனுக்கு சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வந்துவிட்டோம். இதற்கிடையில்தான் லாக்டவுனை அறிவித்தார்கள்.

இப்போது எனது மூன்று மகள்களும் அம்ரேலியில் சிக்கிக்கொண்டனர். நாங்கள் இங்கே சிக்கிக்கொண்டோம். எனது மூத்த மகளுக்கு வயது 17. அவர்கள் எப்போதும் அழுதுகொண்டே இருக்கின்றனர். நகர் பஞ்சாயத்து அலுவலகத்தில் எங்கள் மகள்களை மீட்டுத் தரக்கோரி வேண்டுகோள் வைத்துள்ளேன். அவர்களும் முயல்வதாகக் கூறியுள்ளனர்'' என்றார்.

இதுகுறித்து கணவர் அம்பா ராம் கூறுகையில், ''இந்தூர் மாவட்டத்தில் உள்ள டெபல்பூர் தாலுகாவின் கீழ் உள்ள ரலாய்தா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். எங்கள் மகள்கள் மூவரும் அம்ரேலியில் வயலில் வேலை செய்து வருகிறார்கள். தற்போது அவர்களது முதலாளியின் வளாகத்திலேயே தங்கியுள்ளனர்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x