Published : 04 May 2020 07:59 AM
Last Updated : 04 May 2020 07:59 AM

மகாராஷ்டிரா, கர்நாடகா, அசாமில் மதுக் கடைகள் திறக்க அனுமதி

மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் அசாமில் மதுக் கடைகளை திறக்க அம்மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன.

கடந்த மார்ச் 25-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மே 17 வரை மத்திய அரசு நீட்டித்தபோதிலும், கரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

இந்நிலையில், கர்நாடகாவில் 40 நாட்களுக்கு பிறகு இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சைமண்டலங்களில், வணிக வளாகங்களில் அல்லாமல் தனியாக இயங்கும் மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் சிவப்பு மண்டலத்தில் வைரஸ்பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் இதற்கு அனுமதி இல்லை. மேலும் நடன விடுதிகள், பார்கள் மற்றும் ஓட்டல்களில் கவுன்ட்டர்கள் வாயிலாக கூட மது விற்பனைக்கு அனுமதி இல்லை என மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுபோல மகாராஷ்டிராவில் சிவப்பு மண்டலத்தில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் சந்தைகள், வணிக வளாகங்களில் உள்ள கடைகள் தவிர பிற இடங்களில் உள்ள மதுக் கடைகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

கரோனா பாதிப்பு குறைவாக உள்ள அசாமில் மாநிலம் முழுவதும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபான விற்பனை கடைகளை திறக்க உடனே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மதுக்கடைகளை திறக்க மாநில அரசு ஏற்கெனவே முயற்சி மேற்கொண்டபோதிலும், தற்போது காத்திருக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறும்போது, “கவலை வேண்டாம். இது ஒரு தற்காலிக நடவடிக்கையே” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x