Published : 04 May 2020 07:53 AM
Last Updated : 04 May 2020 07:53 AM

திருப்பதி தேவஸ்தானத்தின் 1,400 ஒப்பந்த ஊழியர்களின் பணிக்காலம் ஒரு மாதம் நீட்டிப்பு: மே 17 வரை தரிசனம் ரத்து

திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் 1,401 பேரின் பணிக்காலம் மேலும் ஒரு மாதம் நீடிக்கப்படும் என தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.

திருமலையில் துப்புரவு பணிகளை தனியார் நிறுவனத்திடம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒப்படைத்துள்ளது. இந்த நிறுவனத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் 1401 பேரின் ஒப்பந்த காலம் ஏப்ரல் 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் திருமலையில் தற்போது பக்தர்கள் இல்லாத காரணத்தால் இவர்களின் பணி ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. இதனால் இவர்கள் அனைவரும் திருப்பதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த திருப்பதி எம்எல்ஏ கருணாகர் ரெட்டி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருப்பதி தேவஸ்தானத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து இவர்களின் ஒப்பந்த காலம் மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்படும் என தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரிஅனில்குமார் சிங்கால் அறிவித்தார்.

கரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கால் திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் மே 3-ம் தேதி வரை பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அதுவரை தேவஸ்தான கோயில்கள் அனைத்திலும் பக்தர்கள் அனுமதி ரத்து செய்யப்படுவதாக அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x