Last Updated : 03 May, 2020 01:07 PM

 

Published : 03 May 2020 01:07 PM
Last Updated : 03 May 2020 01:07 PM

மேற்கு வங்கத்தில் கரோனாவால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பா? உண்மையை மறைக்கிறதா மம்தா அரசு?

மேற்கு வங்கத்தில் கரோனா வைரஸ் நோயால் 100-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில் 33 பேர் இறந்ததாகக் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு கணக்கு காட்டுவதாக பாஜக குற்றம்சாட்டுகிறது

இப்போது வரை மேற்கு வங்கத்தில் 105-க்கும்மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 33 பேர் மட்டுமே கரோனாவில் உயிரிழந்துள்ளனர். 72 பேர் நீண்டகாலம் இருந்து வரும் மற்ற நோய்களால்(co-morbidities) இறந்ததாக மாநில அரசு தெரிவி்த்துகிறது.

கோ-மார்பிடிட்டிஸ் என்பது ஒருவருக்கு நீண்டகாலமாக உடலில் இருக்கும் நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம், இதயக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு, சுவாசக் கோளாறு உட்பட ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்கள் இருப்பதாகும். ஆகியவற்றுக்கு நீண்டகாலமாக மருத்துவச் சிகிச்சை எடுத்துவருதாகும்.

மேற்கு வங்க மாநிலத்தைப் பொறுத்தவரை இதுபோன்ற நீண்ட கால உடன்நோய்களோடு இருப்பவர்கள் கரோனா வைரஸால் தாக்கப்பட்டு உயிரிழந்தாலும் இவர்கள் கரோனாவில் இறக்கவில்லை, நீண்டகால நோய்களால் இறந்ததாக மம்தா அரசு கணக்கு காட்டுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் இதுவரை கரோனாவால் 922 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 33 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் மே. வங்கத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக மாநிலஅரசு தெரிவித்துள்ளது. அதாவது மே1 மற்றும் 2-ம் ேததிக்கு இடையே 7 பேரும், ஏப்ரல் 30 முதல் மே 1-ம் தேதி இடையே 8 ேபரும் கரோனாவில் உயிரிழந்ததாக மாநில சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.

ஆனால், இந்த 48 மணிநேர இடைவெளியில் கரோனாவில் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்து கடந்த ஏப்ரல் 30-ம்தேதிவரை பதிவான விவரங்களை மாநில சுகாதாரத்துறை இணையதளத்திலிருந்து நீக்கிவிட்டனர்.

ஏப்ரல் 30-ம் தேதிவரை கரோனா வைரஸால் பாதி்க்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை105 ஆக இருந்தது. ஆனால், மாநில சுகாதாரத்துறையோ 33 பேர் மட்டுமே கரோனாவில் இறந்துள்ளனர், மீதமுள்ள 72 பேர் நீண்டகால நோய்களால் இறந்தனர், தற்செயலாகவே கரோனா இருப்பது கண்டறியப்பட்டது என்று கூறி அந்த இறப்புக்கணக்கை கரோனா கணக்கில் சேர்க்கவில்லை

இதுதவிர கரோனாவில் மேலும் 15 பேர் பாதிக்கப்பட்டு இறந்தநிலையில் அவர்களையும் சேர்த்தால் 120 ஆக அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக டார்ஜ்லிங் தொகுதி பாஜகஎம்.பி. ராஜு பிஸ்த் நிருபர்களிடம் கூறுகையில், “ முதல்வர் மம்தா பானர்ஜி 5 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளார். அவர்கள்தான் யார் கரோனாவால் இறந்தார்கள், இறக்கவில்லை என்பதை முடிவு செய்கிறார்கள். கொல்கத்தாவிலிருந்து 600 கிமீதொலைவில் இருக்கும் டார்ஜிலிங்கில் ஒருவர் கரோனாவில் இறந்தால் அந்த மருத்துவர்களால் எவ்வாறு கரோனாவில் இறந்தார், இறக்கவில்லை என பரிசோதனை இல்லாமல் முடிவு செய்ய முடியும்.

உயிரிழந்தவர்கள் குறித்த உண்மையான எண்ணிக்கையை முதல்வர் மம்தா பானர்ஜி அரசு மறைக்கிறது. குற்றச்சாட்டு கூற சரியான நேரம் இது இல்லை என்றாலும் மக்களிடம் உண்மையைக் கூறாவிட்டாலும் அது குற்றம்தான். மே.வங்கத்தில் நிலைமை மோசமாக இருக்கிறது. மருத்துவமனையில் போதுமான பரிசோதனைக் கட்டமைப்பு வசதிகள் இல்லை.

மாநிலத்தின் நிலைமையைக் கண்டறிய அனுப்பப்பட்ட மத்தியக் குழுவுக்கும் மாநில அரசு ஒத்துழைக்கவில்லை. அவர்கள் வந்தபோது திடீரென கொல்கத்தாவிலும், வடக்கு வங்கத்திலும் பரிசோதனையை அதிகப்படுத்தினர் “ எனக் குற்றம்சாட்டினார்

மேற்கு வங்கம் ஆளுநர் ஜக்தீப் தன்கரும் குற்றம்சாட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேற்கு வங்கத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்த உண்மையான தகவல்களை முதல்வர் மம்தா பானர்ஜி மறைக்கிறார். கடந்த ஏப்ரல் 30-ம் தேதி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 572 என்று மாநில அரசின் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு அடுத்த நாள் புதிதாக எத்தனை பேருக்கு பாதிப்பு, மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எவ்வளவு என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எவ்வளவு என்ற உண்மையான விவரத்தை முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட வேண்டும். அப்போதுதான், மாநில மக்களை கரோனா வைரஸ் தொற்றில் இருந்து காப்பாற்ற முடியும். கரோனா வைரஸால் நெருக்கடியான காலகட்டத்தை சந்தித்து வரும் நிலையில், அரசியல் ரீதியாக அணுகாமல் கரோனா வைரஸை ஒழிக்க மம்தா பானர்ஜி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x