Last Updated : 02 May, 2020 08:37 AM

 

Published : 02 May 2020 08:37 AM
Last Updated : 02 May 2020 08:37 AM

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப சிறப்பு ரயில்களை இயக்குகிறது மத்திய அரசு

ஊரடங்கு காரணமாக சிக்கிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் உத்தரபிரதேசம் மற்றும் பிஹாரை சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் 47 லட்சம் பேர் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் சொந்த ஊர் திரும்ப சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்குகிறது.

கரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கால் வெளி மாநிலங்களில் லட்சக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர். இவர்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் சொந்த ஊர் திரும்ப அனுமதிக்கலாம் என மத்திய அரசு கடந்த புதன்கிழமை அறிவித்தது. இதையடுத்து இவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளும் பணியை மாநில அரசுகள் தொடங்கியுள்ளன. சிறப்பு ஹெல்ப்லைன் மற்றும் இணையதளங்களை உருவாக்கி தங்கள் மாநிலத்தவரை பதிவுசெய்து வருகின்றன.

இதில் டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் காத்திருக்கும் பிஹார் தொழிலாளர்கள் எண்ணிக்கை சுமார் 30 லட்சம் எனத் தெரியவந்துள்ளது. இவர்களில் மாணவர்களும் அதிகம் உள்ளனர்.

மேலும் அதே மாநிலங்களில் பிஹார்வாசிகளை தொடர்ந்து உ.பி. தொழிலாளர்கள் சுமார் 17 லட்சம் பேர் உள்ளனர். இதனால் இவர்கள் அனைவரையும் பிஹார்,உ.பி.க்கு திருப்பி அனுப்புவது, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.

இந்நிலையில் தமிழகம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா,மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய 7 மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று ‘ஸ்ரமிக் ஸ்பெஷல்’ என்ற பெயரில் சிறப்பு ரயில்களை மத்திய அரசு நேற்று முதல் இயக்கத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளரும் தகவல் ஒலிபரப்பு துறையின் கூடுதல் தலைமை இயக்குநருமானடி.ஜே.நாராயண் கூறும்போது,“இந்த ரயில்கள் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு இடையே சிக்கியவர்களை மீட்பதற்காக விடப்பட்டுள்ளன. இதன் ஒருங்கிணைப்பு பணியில் அமைச்சக மூத்த அதிகாரிகள் ஈடுபடுவார்கள். இந்த ரயில்களில் மாநிலங்களால் கரோனா தொற்றுஇல்லாதவர்கள் என அறிவிக்கப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதில் சமூக விலகல் முறையாக கடைப்பிடிக்கப்படும்” என்றார்.

இந்த ரயில் பயணிகளை கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பேருந்துகள் மூலம் ரயில் நிலையங்களுக்கு கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பை அந்தந்த மாநில அரசுகள் ஏற்க வேண்டும். இந்த ரயில்களில் குடிநீர் மற்றும் உணவை ரயில்வே துறை வழங்கும். இதில் பயணம் செய்வோர் முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை 100 முதல் 400 வரை இருக்க வாய்ப்புள்ளது. முதல் சிறப்பு ரயில் நேற்று அதிகாலை தெலங்கானாவில் இருந்து ஜார்க்கண்ட் புறப்பட்டுச் சென்றது. அடுத்த ரயில் கேரளாவில் இருந்து ஒடிசாவுக்கு மாலையில் புறப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x