Published : 01 May 2020 07:11 PM
Last Updated : 01 May 2020 07:11 PM

கரோனா; ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு

ஊரடங்கு மே 3-ம் தேதி நிறைவு பெற இருந்த நிலையில் இதனை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் ஊரடங்கு மே 3-ம் தேதி நிறைவு பெற இருந்த நிலையில் இதனை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் ‘‘மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

அதேசமயம் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற வண்ண மாவட்டங்களுக்கு ஏற்ப விதிமுறைகள் மாற்றப்படும். இதற்கான விரிவான வழிகாட்டும் நெறிமுறை வழங்கப்படும். சிவப்பு நிறப்பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடு தொடரும், அதேசமயம் ஆரஞ்சு பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் தொழில்கள் செயல்பட அனுமதி வழங்கபடலாம்.

பச்சை நிறப்பகுதியில் விலக்கு வழங்க மாநில அரசு நிலையை ஆராய்ந்து உத்தரவுகள் பிறப்பிக்கலாம். எனினும் மத்திய அரசின் வழிகாட்டும் நெறிமுறையை பின்பற்ற வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x