Published : 29 Apr 2020 06:53 PM
Last Updated : 29 Apr 2020 06:53 PM

கரோனா நோயாளிகள் வார்டை சுத்தம் செய்ய முறையான உபகரணங்கள் கொடுங்கள்: போராட்டத்தில் இறங்கிய உ.பி. தூய்மைப் பணியாளர்கள் 

கரோனா நோயாளிகள் வார்டை சுத்தம் செய்வதற்கு முறையான உபகரணங்கள் வழங்கக் கோரி உ.பி. மாநில தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

கரோனா வைரஸ் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ள பாடங்களில் மிக முக்கியமானது தூய்மைப் பணியாளர்களிடம் நாம் அன்பும் மதிப்பும் செலுத்த வேண்டும் என்பதுதான். அதேநேரம் அவர்கள் மிக ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்ற நேர்ந்துள்ள நிலையில் அவர்களுக்குத் தேவையான அனைத்துவிதமான வசதிகளையும் செய்துகொடுத்தல் நிர்வாகங்களின் முக்கியக் கடமையாகும்.

உ.பி.யின் சில பகுதிகளில் கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வார்டுகளில் துப்புரவுப் பணியை சரிவரச் செய்வதற்கு உரிய உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்ற அவலம் தொடர்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கவுதம் புத்தா நகர் மாவட்ட மருத்துவமனை துப்புரவுத் தொழிலாளர்கள் தங்கள் அவல நிலையை வெளிப்படுத்த இன்று ஆட்சியர் அலுவலகம் லாக் டவுன் விதிமுறைகளுடன் கூடிய சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, மாவட்ட மருத்துவமனையின் பல சுகாதார ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டனர். கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் தங்கள் பணியிடத்தில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறையை உடனடியாகப் போக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து நீரஜ் என்ற தூய்மைப் பணியாளர் ஏஎன்ஐயிடம் கூறுகையில், ''கரோனா வைரஸ் நோயாளிகளின் வார்டை சுத்தம் செய்வதே எங்கள் பணி. எனவே எங்களுக்கு முறையான உடல் பாதுகாப்பு உபகரணங்களை, பாதுகாப்புக் கவசங்களை வழங்குமாறு உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். எங்கள் கோரிக்கைகளுக்கு வேகமாக நடவடிக்கை எடுப்பார்களா என்று தெரியிவில்லை'' என்றார்.

மற்றொரு சுகாதாரப் பணியாளர் சச்சின் குமார் கூறுகையில், ''மருத்துவமனையில் எங்களுக்கு எந்த வசதிகளும் இல்லை. எங்களுக்கு மாதந்தோறும் ரூ..6,900 கிடைக்கிறது. அவர்கள் எங்களுக்கு உள்ளூர் முகக்கவசம், கையுறைகள் மற்றும் காலணிகளை வழங்கியுள்ளனர். இப்போதுள்ள தட்பவெப்பநிலையில் அவற்றை நாங்கள் அணிய முடியாது'' என்றார்.

மாவட்ட ஆட்சியர் பதில்

கவுதம் புத்தா நகர் (ஜிபிஎன்) மாவட்ட ஆட்சியர் டி.எம்.சுஹாஸ் லாலினகரே யாதிராஜ், இது தொடர்பாக கூறுகையில், ''இந்த சுகாதார ஊழியர்களுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களுடனும் வழங்க வேண்டுமென மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளருக்கு (சி.எம்.எஸ்) நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தத் தொழிலாளர்கள் என்ன சொன்னாலும் அது சரிதான். இந்தத் தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்குமாறு கண்காணிப்பாளர் பணிக்கப்பட்டுள்ளார். நகர ஆட்சியரும் இப்பிரச்சினையில் கவனம் செலுத்தும்படி அவரிடம் அறிவுறுத்தியுள்ளோம். தூய்மைப் பணியாளர்கள் தங்கள் சம்பளத்தை அதிகரிக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர். இதை விரைவில் ஆராய்வோம்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x