Last Updated : 18 Apr, 2020 03:36 PM

 

Published : 18 Apr 2020 03:36 PM
Last Updated : 18 Apr 2020 03:36 PM

ரம்ஜான் மாதத்தில் சமூக விலகலை கடைப்பிடிப்பது அவசியம்: முஸ்லிம்களுக்கு மத்திய அமைச்சர் நக்வி வலியுறுத்தல்

புதுடெல்லி

கரோனாவில் இருந்து தப்பிக்க ரமலான் மாதத்தில் சமூக விலகலை முஸ்லிம்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வலியுறுத்தி உள்ளார்.

இஸ்லாமியர்களின் ரமலான் மாதம் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்குகிறது. இதில் 30 நாட்கள் நோன்பு இருக்கும் முஸ்லிம்கள் அதன் இறுதியில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இம்மாதத்தில் தினமும் மாலையில் நோன்பு முடிக்க அனைவரும் ஒன்றாகக் கூடுவதுடன், இப்தார் நிகழ்ச்சிகளும் நடைபெறுவது உண்டு. இதுமட்டுமின்றி இரவில் மசூதிகள் அல்லது தனியார் இடங்களில் ஒன்றுகூடிதராஹவீ எனும் சிறப்பு தொழுகையும் நடத்துவார்கள்.

ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் இதுபோன்ற வழக்கங்களால் கரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இதை முஸ்லிம்களிடம் எடுத்துக் கூற, மத்திய வஃக்பு வாரியத்தின் தலைவருமான நக்வி நேற்று முன்தினம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

சன்னி மற்றும் ஷியா வஃக்பு வாரியத் தலைவர்கள் மற்றும் அவைகளின் நிர்வாக அதிகாரிகள் 30-க்கும் மேற்பட்டோட் அதில் கலந்து கொண்டனர். அப்போது ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் சமூக விலகலை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மத்திய அமைச்சரான நக்வி மேலும் கூறும்போது, “ஊரடங்கு காலத்தில் மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகளை அனைவரும் கவனமாக பின்பற்ற வேண்டும்.

வீட்டில் இருந்தபடியே நோன்பு மற்றும் தொழுகையில் ஈடுபட்டு சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்.இது தொடர்பான பொய்ச் செய்திகள், கைப்பேசி மற்றும் சமூகவலைதளங்களில் பரவாமல் தடுப்பதும் அவசியம். இந்த நடவடிக்கையில் வஃக்பு வாரியங்கள் முன்னின்று செயல்படவேண்டும்.

ரமலான் மாதத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளில் மசூதிகள் மற்றும் இதர இடங்களில் கூடுவதுதடைசெய்யப்பட்டுள்ளது. கரோனா தொடர்பான பாதுகாப்பு

நடவடிக்கையில் இந்து, சமணர் கோயில்கள், கிறிஸ்தவ தேவாலாயங்கள், சீக்கிய குருத்துவாராக்கள் ஆகியவற்றிலும் பக்தர்கள் கூடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே கரோனா பரவலை மனதில்கொண்டு அதை தடுப்பதில் ரமலான் மாதத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்றார். மத்திய வஃக்பு வாரியத்தின் கீழ் நாடு முழுவதிலும்

சுமார் 7 லட்சம் பதிவுபெற்ற மசூதிகள், ஈத்காக்கள், இமாம்பாடாக்கள் மற்றும் தர்காக்கள் செயல்படுகின்றன. இவற்றிலும் ரமலானுக்காக இஸ்லாமியர்கள் கூடுவதற்கு அனுமதிக்கக் கூடாது, இதில் எந்தவித பாரபட்சமும் பார்க்கக் கூடாது எனவும் அமைச்சர் நக்வி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வழக்கமான நோன்பு கஞ்சி காய்ச்சுவதிலும், அதை விநியோகிப்பதிலும் கரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும் அமைச்சர் நக்வி குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x