Published : 16 Apr 2020 06:59 PM
Last Updated : 16 Apr 2020 06:59 PM

ம.பி.யில் மார்ச் 23-ம் தேதி வரை எந்தவித கரோனா பரிசோதனையும் நடைபெறவில்லை: சவுகான் மீண்டும் குற்றச்சாட்டு

மத்திய பிரதேசத்தில் மார்ச் 23-ம் தேதி வரை எந்தவித கரோனா பரிசோதனையும் நடைபெறவில்லை என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

ம.பி. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் மார்ச் 23-ம் தேதி இரவு பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் சட்டப்பேரவையில் அவர் பெரும்பான்மையை நிருபித்தார்.

இந்த சூழ்நிலையில் கரோனா பாதிப்பு வேகமாக பரவியால் அந்த மாநிலத்தில் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மட்டுமே அனைத்து பணிகளையும் கவனித்து வருகிறார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் விமர்சித்து இருந்தார். அவர் கூறுகையில் ‘‘கரோனா பாதிப்பு மத்திய பிரதேசத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மரணங்களும் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் மாநில அரசு முழுமையாக செயல்படவில்லை. மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் கூட இல்லை. கரோனாவை எதிர்த்து பணியாற்றுவதில் சுணக்கம் நீடிக்கிறது. அவசரப்பட்டு காங்கிரஸ் அரசை பாஜக கவிழ்ந்ததால் தான் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது.’’ எனக் கூறினார்.

இதற்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதுகுறித்து சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில் ‘‘கரோனா பாதிப்பால் மிகவும் நெருக்கடியான சூழல் நிலவும் நிலையில் காங்கிரஸ் இதுபோன்ற மோசமான அரசியலை செய்யும் என எண்ணிப்பார்க்கவில்லை. மத்திய பிரதேசதத்தின் முதல்வர் யார். அவர் தானே. மார்ச் 23-ம் தேதி வரை அவர் முதல்வராக என்ன செய்து கொண்டிருந்தார்.’’ எனக் கூறினார்.

கரோனா விவகாரத்தில் ம.பி.யில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.

இந்தநிலையில் ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:

‘‘மத்திய பிரதேசத்தில் மார்ச் 23-ம் தேதி வரை எந்தவித கரோனா பரிசோதனையும் நடைபெறவில்லை. இதற்காக பரிசோதனை கூடங்களும் இல்லை. தற்போது நாள்தோறும் 1200 பேருக்கு சோதனை செய்கிறோம். டெல்லி, நொய்டா போன்ற இடங்களுக்கு மாதிரிகளை அனுப்பி பரிசோதித்து வருகிறோம்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x