Published : 16 Apr 2020 08:06 AM
Last Updated : 16 Apr 2020 08:06 AM

சமூக விலகலை 2022-ம் ஆண்டு வரை தொடர வேண்டிய அவசியம் ஏற்படும்: நிபுணர்கள் எச்சரிக்கை

தொடர்ந்து கரோனா வைரஸ் பரவி வருவதால் வரும் 2022-ம் ஆண்டு வரை சமூக விலகலை தொடர வேண்டிய அவசியம் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரை பிறப்பிடமாகக் கொண்ட கரோனாவைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது. மேலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உயிருக்காகப் போராடி வரும் மிக மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா வைரஸ்தொற்றிலிருந்து தப்பிக்க சமூக விலகலை மக்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்த சமூக விலகலை 2022-ம் ஆண்டு வரை தொடர வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்ப் பிரிவு பேராசிரியர் மார்க்லிப்சிட்ச் கூறும்போது, “கரோனாவைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதைக் கட்டுப்படுத்த ஒரு முறை ஊரடங்கு உத்தரவு போதுமானதாக இருக்காது. 2-ம் கட்ட நிலைக்குச் செல்லும்போது அது தற்போது இருப்பதைவிட வேகமாக பரவும். 2 முறைகளில் இந்த நோய் வேகமாக பரவுகிறது.

ஏற்கெனவே தொற்று உள்ளவர்களிடமிருந்து நோய் பரவுவது ஒரு முறை. மேலும் நோய் எளிதில் பாதிக்கப்படக் கூடியவருக்கு விரைவில் நோய் தொற்றுவது இன்னொரு முறை. நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் இந்த நோய் நமது உடலை எளிதில் தாக்கும்.

இந்த நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் அல்லது இந்த நோயை விரட்டுவதற்கு சிறப்பான சிகிச்சை முறை கொண்டு வரப்படவேண்டும். இல்லாவிட்டால் 2022-ம் ஆண்டு வரைமக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

நம்மிடையே புதிய சிகிச்சைகள் இல்லை. மேலும் தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. போதுமான தீவிர சிகிச்சைப் பிரிவு வசதிகளும் இல்லை. எனவே சமூகவிலகல்தான் இப்போது நமக்குஇருக்கும் ஒரே வழி. இல்லாவிட்டால் 2022-ம் ஆண்டு வரை சமூக விலகலை கடைப்பிடிக்கவேண்டிய தேவை ஏற்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x