Published : 16 Apr 2020 08:04 AM
Last Updated : 16 Apr 2020 08:04 AM

குஜராத் முதல்வரின் கூட்டத்தில் பங்கேற்ற காங். எம்எல்ஏ-வுக்கு கரோனா- தனிமைப்படுத்திக் கொண்ட முதல்வர்

விஜய் ருபானி

காந்திநகர்

குஜராத் முதல்வரின் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கரோனா வைரஸ் தொற்றுஉறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, முதல்வர் விஜய் ருபானி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து குஜராத் முதல்வரின் செயலாளர் அஸ்வனி குமார்நேற்று கூறும்போது, “முதல்வர்விஜய் ருபானி முழு உடல்நலத்துடன் உள்ளார். மருத்துவ நிபுணர்கள் அவரை பரிசோதித்தனர். தற்போதைக்கு முதல்வருக்கு நோய்த் தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வரின் வீட்டுக்கு வர வெளி ஆட்கள் எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். காணொலி காட்சி மற்றும்தொலைபேசி மூலம் மாநில நிர்வாகத்தை முதல்வர் மேற்கொண்டு வருகிறார். ஒரு வாரத்துக்கு அவர் யாரையும் சந்திக்க மாட்டார்” என்றார்.

குஜராத்தின் அகமதாபாத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள 6 இடங்களில் ஜமால்பூர்-காடியாவும் ஒன்றாகும். இந்நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் அழைப்பு விடுத்த கூட்டத்தில், ஜமால்பூர்-காடியா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கேதாவாலாவும் கலந்து கொண்டார். இந்நிலையில் அன்று மாலையில் இம்ரானுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கூட்டத்தில் முதல்வருடன் துணை முதல்வர் நிதின் படேல்,உள்துறை அமைச்சர் பிரதீப் சிங்ஜடேஜா மற்றும் இம்ரான் உள்ளிட்ட 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அவர்கள் விவாதித்தனர். இக்கூட்டத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. என்றாலும் ஏற்கெனவே காய்ச்சல் ஏற்பட்டு, ரத்த மாதிரியைபரிசோதனைக்கு கொடுத்திருந்த எம்எல்ஏ ஒருவரை முதல்வரின் அலுவலகத்தில் அனுமதித்தது எப்படி என சர்ச்சை கிளம்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x