Published : 15 Apr 2020 09:12 AM
Last Updated : 15 Apr 2020 09:12 AM

கரோனா சிகிச்சையின் இருண்ட பக்கம்: 1984 போபால் விஷ வாயுக்கசிவினால் சுவாசப்பாதை பாதிக்கப்பட்ட 4 பேர் கரோனாவுக்குப் பலியான துயரம் - மருத்துவமனைகளில் சேர்க்க மறுப்பு

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கோவிட்-19 காய்ச்சல் பாதித்த 5 பேர்களில் மரணமடைந்த நால்வர் 1984 போபால் விஷவாயுக் கசிவினால் கடும் சுவாசக்குழல் பிரச்சினையினால் அவதிப்பட்டு வந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

யூனியன் கார்பைடு நிறுவனத்தின் விஷவாயுக் கசிவினால் பலருக்கும் சுவாசப்பாதை பிரச்சினைகள் ஏற்பட்டன, இதனால் இவர்கள் தற்போது கரோனா தொற்றுக்கு இலக்காகி வருகின்றனர்.

இதில் ஒரு நோயாளிக்கு ஆம்புலன்ஸ் சேவையும் இரு தனியார் மருத்துவமனைகளில் அனுமதியும் மறுக்கப்பட்டது. இன்னொருவருக்கு தனியார் மருத்துவமனை அனுமதி மறுத்தது, இன்னொருவருக்கு தனியார், அரசு மருத்துவமனை இரண்டுமே அனுமதி மறுத்துள்ளது. கடைசி நேரத்தில் 2 பேருக்கு தனியார் மருத்துவமனை கெஞ்சிக் கூத்தாடிய பிறகு அனுமதி அளிக்க ஒப்புக் கொண்டாலும் ஒருவர் இதில் போகும் வழியிலேயே இறந்த கொடுமையும் நடந்துள்ளது.

கோவிட்-19-க்கு பலியான 52 வயது நபரின் மகன் கவ்ரவ் கார்த்திக் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, ”பி.எம்.ஹெச்.ஆர்.சி மருத்துவமனை திறந்திருந்தால் அங்கு சென்றிருப்போம். கடைசியில் நண்பர்களின் உதவியுடன் 90,000 தொகை திரட்டி தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவர் ஆஸ்துமா நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிஎம்ஆர் நடத்தும் போபால் நினைவு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் என்பதை கோவிட்-19 மருத்துவமனையாக மாற்றியதையடுத்து 1984 போபால் விஷவாயுக் கசிவு பாதித்த நபர்களை அனுமதிக்க மறுத்தனர். மெதில் ஐசோசயனேட் என்ற விஷவாயுக் கசிவு ஆயிரக்கணக்கானோருக்கு பிறப்பிலேயே உருவாகும் நோய்களையும், மூச்சுத்திணறல் நோய்களையும், மேலும் லட்சக்கணக்கானோரை இனம் புரியாத வகையிலும் பாதித்தது குறிப்பிடத்தக்கது. போபால் விஷ வாயுக் கசிவினால் பாதிக்கப்பட்ட சுமார் 28 நோயாளிகள் நுரையீரல் சிகிச்சை வார்டிலிருந்து வெளியே அனுப்பப்பட்டனர்.

பி.எம்.ஹெச்.ஆர்.சியின் 8 சமுதாயச் சுகாதார கூடங்களின் தரவுகளின் படி 1998 முதல் 2016 வரை 50.4% விஷவாயு பாதிப்பு நோயாளிகள் இருதய வால்வு பிரச்சினைகளில் அவதிப்பட்டு வருகின்றனர். 59.6% நோயாளிகள் நுரையீரல் பிரச்சினையாலும் 15.6% நீரிழிவு உள்ளிட்ட கரோனா வைரஸ் உடனடியாகத் தொற்றும் நோய்க்கூறுகளை தன்னகத்தே கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமன் யாதவ் என்ற 52 வயது நபர் நுரையீரல் மருத்துவ மையத்திலிருந்து வெளியே அனுப்பப்பட்டார். இவர் அதன் பிறகு 6 மருத்துவமனைகளில் அணுகியுள்ளார் யாரும் அனுமதிக்க ஒப்புக் கொள்ளவில்லை. ஏப்ரல் 11ம் தேதியன்று இவர் மரணமடைந்தார்.

இதே போல் 80 வயது முதியவரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்க மறுத்ததும் நடந்துள்ளது.

உயர் நீதிமன்றத்தில் மனு:

செவ்வாயன்று போபால் விஷவாயுக் கசிவு பாதிப்பு நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதிக்க மறுத்து வருவதற்கு எதிராக போபால் தகவல் மற்றும் செயல் குழு ஒன்று உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. இதனால் 3 பேர் மரணமடைந்துள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

மற்ற விஷவாயு நோயாளிகளுக்கான மருத்துவமனைகளும் கூட புறநோயாளிகளை அனுமதிப்பதில்லை என்பது அங்கு பீதியைக் கிளப்பி வருகிறது.

ஒரு பக்கம் அரசாங்கம் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் நர்ஸ்களின் அரிய பணிக்காக அவர்களை போர்வீரர்கள் என்று அழைத்து அவர்கள் பணிக்கு உற்சாகமூட்டி வரும் நிலையில் இவ்வாறு நோயாளிகளை அனுமதிக்க மாட்டோம் என்று கூறும் மருத்துவமனைகள், மருத்துவர்கள் பற்றி மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

-சித்தார்த் யாதவ், தி இந்து ஆங்கிலம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x