Published : 12 Apr 2020 02:31 PM
Last Updated : 12 Apr 2020 02:31 PM

ம.பி.யில் அவசரப்பட்டு ஆட்சியை கவிழ்த்த பாஜக: கரோனாவை எதிர்கொள்ள முடியவில்லை; கமல்நாத் விமர்சனம்

போபால்

மத்திய பிரதேசத்தில் அவசரப்பட்டு காங்கிரஸ் அரசை பாஜக கவிழ்ந்ததால் கரோனாவை எதிர்த்து போராட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என முன்னாள் முதல்வர் கமல்நாத் விமர்சித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகி பாஜகவில் இணைந்தார். இதன்தொடர்ச்சியாக, அவரது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.

இதனால் பெரும்பான்மை இல்லாத சூழலில் முதல்வர் கமல்நாத் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முன்வரவில்லை. இதையடுத்து
இந்த சூழலில், மத்திய பிரதேச சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு கூட்ட வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் சட்டப்பேரவையை கூட்டும் முன்பாகவே முதல்வர் கமல்நாத் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ம.பி.யில் புதிய அரசு அமைக்க பாஜக நடவடிக்கை எடுத்து வந்தது.

இந்த சூழலில் பதவி விலகிய 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜே.பி. நட்டாவை சந்தித்து அவரது முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

ம.பி. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் சட்டப்பேரவையில் அவர் பெரும்பான்மையை நிருபித்தார்.

இந்த சூழ்நிலையில் கரோனா பாதிப்பு வேகமாக பரவியால் அந்த மாநிலத்தில் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மட்டுமே அனைத்து பணிகளையும் கவனித்து வருகிறார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

கரோனா பாதிப்பு மத்திய பிரதேசத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மரணங்களும் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் மாநில அரசு முழுமையாக செயல்படவில்லை. மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் கூட இல்லை. கரோனாவை எதிர்த்து பணியாற்றுவதில் சுணக்கம் நீடிக்கிறது. அவசரப்பட்டு காங்கிரஸ் அரசை பாஜக கவிழ்ந்ததால் தான் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. நெருக்கடியான சூழலில் கூட பாஜக பொறுமையாக செயல்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x