Last Updated : 11 Apr, 2020 11:30 AM

 

Published : 11 Apr 2020 11:30 AM
Last Updated : 11 Apr 2020 11:30 AM

கரோனாவுக்கு கேரளாவில் 3-வது பலி: 71 வயது முதியவர் மருத்துவமனையில் உயிரிழப்பு

கோப்புப்படம்

கண்ணூர்

கரோனா வைரஸின் தாக்கத்துக்கு கேரள மாநிலத்தில் இன்று மூன்றாவது உயிரிழப்பு நேர்ந்துள்ளது. 71 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி பரியாரம் மருத்துவமனையில் உயிரிழந்தார் என்று கண்ணூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த முதியவர் கேரள மாநிலத்தைச் சேராதவர். புதுச்சேரிக்கு உட்பட்ட மாஹே பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் தொடக்கத்தில் வேகமாகப் பரவிய நிலையில் மாநில அரசு எடுத்த தீவிரமான நடவடிக்கைகளால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதுவரை அந்த மாநிலத்தில் கரோனா வைரஸால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரிக்கு உட்பட்ட மாஹேவைச் சேர்ந்த 71 வயது முதியவர் உடல்நலக்குறைவால் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கும் இவருக்கு உடல் நிலைதேறவில்லை என்பதால் பரியாரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான் அவருக்கு கரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது.

அவருக்குத் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டபோதிலும் தீவிரமான சுவாசக் கோளாறு இருந்ததால் இன்று காலை அந்த முதியவர் உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கண்ணூர் மாவட்ட மருத்துவ அதிகாரி மருத்துவர் கே.நாராயணா நாயக் நிருபர்களிடம் கூறுகையில், “புதுச்சேரிக்கு உட்பட்ட மாஹே பகுதியைச் சேர்ந்த 71 வயதான முதியவர் உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 26-ம் தேதி தலச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சல், மூச்சுவிடுதலில் சிரமம் தொடர்பாக சிகிச்சை பெற்றார். அங்கு அவரின் உடல்நிலை தேறவில்லை.

அதன்பின் பரியாரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அந்த முதியவருக்கு நடத்திய சோதனையில் கரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் பல்வேறு திருமண நிகழ்ச்சிகளுக்கும், மசூதியில் நடந்த சிறப்புத் தொழுகையிலும் பங்கேற்றதாகத் தெரிவித்தார். ஆனால் யாரிடமிருந்து முதியவருக்கு கரோனா வைரஸ் பரவியது எனத் தெரியவில்லை. இந்த முதியவர் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட பின் அது குறித்து அறியாமல் பலருடன் வாகனத்தில் பயணித்துள்ளார்.

அந்த முதியவரிடம் பழகியவர்கள் குறித்த விவரங்களை விசாரித்து அவர்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளக் கூறினோம். இந்த முதியவருக்கு ஏற்கெனவே ரத்தஅழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சினைகள் இருந்து வந்தன.

அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்தபோதிலும் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலையில் உயிரிழந்தார். இந்த முதியவரோடு தொடர்புடைய பலரின் ரத்தமாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்பட்டன. அதில் 16-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று இல்லை. இன்னும் 40 பேரின் ரத்த மாதிரி முடிவுகள் வர வேண்டியுள்ளது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x