Last Updated : 10 Apr, 2020 11:25 AM

 

Published : 10 Apr 2020 11:25 AM
Last Updated : 10 Apr 2020 11:25 AM

இந்தூரில் நாளுக்குநாள் எகிறும் பலி எண்ணிக்கை: வேலைக்கு வராத மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்; அரசு எச்சரிக்கை

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தூர் நகரில் மாநிலத்திலேயே அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுவரும் நிலையில மருத்துவமனைகளில் வேலைக்கு வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று மருத்துவர்களுக்கும் ஊழியர்களுக்கும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகையே அலற வைத்துள்ள கரோனா வைரஸ் இந்தியாவில் 6000க்கும் அதிகமானோரை பாதித்ததோடு 200க்கும் மேற்பட்டோரை பலிகொண்டுள்ளது. வியாழக்கிழமை, 44 வயது நபர், இந்தூரில் உயிரிழந்தார். இதன்மூலம் இந்தூர் நகரத்தில் மொத்த கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளதாக எம்.ஜி.எம் மருத்துவக் கல்லூரி தகவல் அளித்துள்ளது.

ம.பி.யில் இதுவரை 397 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தூரில் மட்டும் 221 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ம.பி.யைப் பொறுத்தவரை இந்தூர் நகரில் அதிக அளவில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இது நகரில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள காரணத்தால் இந்தூர் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் இந்த இக்கட்டான நேரத்தில் யாரும் விடுப்புகள் எடுக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதோடு கடுமையான நடவடிக்கைகள் பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தூர் மாவட்ட ஆட்சியர் மணீஷ் சிங், நகரத்தில் உள்ள ஏழு மருத்துவமனைகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளதாவது:

''கரோனா வைரஸ் நெருக்கடிகளுடன் நாடு போராடிக்கொண்டிருக்கிறது. இக்கொடிய ஆட்கொல்லி வைரஸினால் இந்தூர் நகரில் எதிர்பாராத அளவு பலி எண்ணிக்கையும் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்த இக்கட்டான நேரத்தில், மருத்துவர்கள் தங்கள் விடுப்புகளை ரத்துசெய்துவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். மருத்துவ உதவியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் தங்கள் சேவைகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஏதாவது அவசர விடுமுறை என்றால் மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதியின்றி யாருக்கும் விடுப்புகள் அனுமதிக்கப்பட மாட்டாது.

மருத்துவமனை அதிகாரிகள் அதன் அனைத்து மருத்துவ உதவியாளர்கள் மற்றும் வெளிப்புற ஊழியர்களும் தங்கள் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

மருத்துவமனையில் அனைத்து மருத்துவ உபகரணங்களும் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.

இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக மருத்துவமனையில் இல்லாமல் எந்தவொரு காரணத்தினாலும் தொடர்ந்து விடுப்பில் இருக்கும் அல்லது தங்கள் சேவைகளை வழங்காத ஊழியர்கள் குறித்து மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதன்பிறகும் அவர்கள் மருத்துவமனைக்கு வராவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் மேலாண்மைச் சட்டம் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியவற்றின் செல்லுபடியாகும் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்படும்.

மருத்துவமனைகளுக்குத் தேவையான அளவுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) வழங்கப்பட்டுள்ளன, அவை கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஈடுபடும் துணை மருத்துவ ஊழியர்களால் பயன்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

ஒருவேளை, கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகள் மருத்துவ ஊழியர்களால் பின்பற்றப்படாவிட்டால், அவர்கள் மீது 'தொழில்முறை மற்றும் நெறிமுறை தவறான நடத்தை'க்காக தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2018 இன் பிரிவு 27 ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்''.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மணீஷ் சிங் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x