Last Updated : 18 Aug, 2015 09:46 AM

 

Published : 18 Aug 2015 09:46 AM
Last Updated : 18 Aug 2015 09:46 AM

ரூ.640 கோடி இழப்பீடு கோரும் வழக்கில் நெஸ்லேவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்: மேகி நூடுல்ஸ் மாதிரிகளை மீண்டும் பரிசோதிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் ரூ. 640 கோடி இழப்பீடு கேட்டு மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் நெஸ்லே நிறுவனத்துக்கு நோட் டீஸ் அனுப்ப தேசிய நுகர்வோர் நல ஆணையம் உத்தரவிட்டது.

மேலும் நூடுல்ஸ் மாதிரிகளை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் மீண்டும் பரிசோதிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

மேகி நூடுல்ஸ் உணவுப் பொருளில் அனுமதிக்கபட்ட அளவை விட கூடுதலாக காரீயம் இருந்ததாக கூறி அவற்றின் விற் பனைக்கு மத்திய உணவு தர பாதுகாப்பு ஆணையம் தடை விதித்தது. மேகி நூடுல்ஸ் தயாரிக் கும் நெஸ்லே நிறுவனம் இத் தடையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தது. இதில் 9 வகை நூடுல்ஸ் மீதான தடையை மும்பை உயர் நீதிமன்றம் கடந்த 13-ம் தேதி ரத்து செய்தது.

இதனிடையே நெஸ்லே நிறு வனத்திடம் ரூ.640 கோடி இழப்பீடு கேட்டு தேசிய நுகர்வோர் நல ஆணையத்தில் மத்திய அரசு கடந்த வாரம் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவில் முறையற்ற வர்த்தக நடவடிக்கை, பாக்கெட் களில் தவறான தகவல்கள், நுகர் வோரை தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் ஆகிய குற்றச் சாட்டுகளை நெஸ்லே நிறுவனம் மீது மத்திய அரசு கூறியிருந்தது.

இந்த மனுவை நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையிலான தேசிய நுகர்வோர் நல ஆணையம் (என்.சி.டி.ஆர்.சி) நேற்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

அப்போது மும்பை உயர் நீதி மன்ற உத்தரவை கவனத்தில் எடுத்துக்கொண்ட ஆணையம், மேகி நூடுல்ஸ் மாதிரிகளை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங் களில் மீண்டும் பரிசோதிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

“நூடுல்ஸ் மாதிரிகள் அங்கீ கரிக்கப்படாத ஆய்வகங்களில் பரிசோதிக்கப்படாத காரணத்தால் அவற்றின் மீதான தடையை மும்பை உயர் நீதிமன்றம் நீக்கி யுள்ளது. மேலும் ஆய்வறிக்கை பெறுவதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை” என்று அமர்வின் உறுப்பினர்கள் குறிப் பிட்டனர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் கூறும்போது, “நூடுல்ஸ் தரம் இவ்வாறு இருக்க வேண்டும் என விதிகள் ஏதும் வகுக்கப்படவில்லை. என்றாலும் உணவு தர பாதுகாப்பு ஆணையமே இந்த விவகாரங்களில் முடிவு எடுக்கிறது” என்றார்.

இதனை தன்னிச்சையானது என்று மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளதை அமர்வு சுட்டிக் காட்டியது. இதையடுத்து இவ்வழக்கு செப்டம்பர் 30-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தேசிய நுகர்வோர் நல ஆணையத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், ஆபத்தான பொருளை விற்பனை செய்தது மற்றும் முறையற்ற வர்த்தக நடவடிக்கைக்காக ரூ.284.55 கோடியும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ரூ.3.55.40 கோடியும் நுகர்வோர் நல நிதி யத்தில் நெஸ்லே நிறுவனம் செலுத்த வேண்டும்” என்று கூறப் பட்டுள்ளது.

மேலும் இத்தொகை கோரப்படும் நாளில் இருந்து செலுத்தப்படும் நாள் வரை 18 சதவீத வட்டியும் செலுத்த வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x