Published : 24 Mar 2020 09:56 PM
Last Updated : 24 Mar 2020 09:56 PM

நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு: அறிவிப்பை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்

புதுடெல்லி

பிரதமர் அறிவித்தபடி நாடுமுழுவதும் இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

உலக அளவில் நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500 பேரை தாண்டி விட்டது.

இதனால், பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். இதைச் செயல்படுத்தியபின்புதான் மாநில அரசுகள் தற்போது ஊரடங்கை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் செயல்படுத்தி வருகின்றனர்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாக தெரிவித்து இருந்தார். அதன்படி அவர் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார்.

அவர் தனது உரையில் ‘‘அடுத்த 21 நாட்களுக்கு நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும். ஒவ்வொரு இந்தியரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த 21 நாட்களை மக்கள் ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு என்பது உங்களை, உங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது.’’ எனக் கூறினார்.

பிரதமர் அறிவித்தபடி நாடுமுழுவதும் இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x