Published : 24 Mar 2020 05:43 PM
Last Updated : 24 Mar 2020 05:43 PM

ம.பி.யில் நம்பிக்கை வாக்கெடுப்பு; சிவராஜ் சிங் சவுகான் அரசு வெற்றி; பிஎஸ்பி, எஸ்பி எம்எல்ஏக்களும் ஆதரவு

ம.பி. சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பை காங்கிரஸ் புறக்கணித்தது. முந்தைய கமல்நாத் அரசுக்கு ஆதரவளித்த பிஎஸ்பி எம்எல்ஏக்கள் 2 பேரும் சமாஜ்வாதி எம்எல்ஏ ஒருவரும், சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 வரும் இந்த முறை பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகி பாஜகவில் இணைந்தார். இதன்தொடர்ச்சியாக, அவரது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.

இதனால் பெரும்பான்மை இல்லாத சூழலில் முதல்வர் கமல்நாத் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முன்வரவில்லை. இதையடுத்து
இந்த சூழலில், மத்திய பிரதேச சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு கூட்ட வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் சட்டப்பேரவையை கூட்டும் முன்பாகவே முதல்வர் கமல்நாத் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ம.பி.யில் புதிய அரசு அமைக்க பாஜக நடவடிக்கை எடுத்து வந்தது.

இந்த சூழலில் பதவி விலகிய 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜே.பி. நட்டாவை சந்தித்து அவரது முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

ம.பி. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் நேற்று இரவு பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநர் லால்ஜி டாண்டன் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அவரது அரசு இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரியது. பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால் அரசு வெற்றி பெரும் சூழல் ஏற்கெனவே இருந்தது. இந்த சூழலில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்தது. இதனால் சிவராஜ் சிங் சவுகான் அரசு எதிர்ப்பு ஏதுமின்றி நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது.

பாஜகவுக்கு ஆதரவாக அக்கட்சி எம்எல்ஏக்கள் 107 பேரும் வாக்களித்தனர். இதுமட்டுமின்றி முந்தைய கமல்நாத் அரசுக்கு ஆதரவளித்த பிஎஸ்பி எம்எல்ஏக்கள் 2 பேரும் சமாஜ்வாதி எம்எல்ஏ ஒருவரும், சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 வரும் இந்த முறை பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் பெரும்பான்மைக்கும் அதிகமாக 112 எம்எல்ஏக்களின் ஆதரவு சவுகான் அரசுக்கு கிடைத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x