Published : 22 Mar 2020 03:27 PM
Last Updated : 22 Mar 2020 03:27 PM
உத்தரகண்ட் மாநிலத்திலும் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் அறிவித்துள்ளார்.
சீனாவில் உருவாகி உலகை ஆட்டிப் படைத்து வரும் கரோனா வைரஸுக்கு உலக நாடுகள் அஞ்சி வருகின்றன. உலக அளவில் இதுவரை கரோனா வைரஸுக்கு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளார்கள். 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும். தடுப்பு நடவடிக்கைகளும் எடுத்தாலும் கரோனா பரவலைத் தடுக்க முடியவில்லை. தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
மேலும் இன்று மக்கள் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டபடி மக்கள் ஊரடங்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் மக்கள் ஊரடங்கு கரோனா வைரஸ் பரவதைத் தடுக்க பெருமளவு உதவும் என்பதால் இதனை வரும் 31-ம் தேதி வரை நீட்டித்து பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து உத்தரகண்ட் அரசும் ஊரடங்கு உத்தரவு 31-ம் தேதி வரை தொடரும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறியதாவது:
இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இதனால் உத்தரகண்ட் மாநிலத்திலும் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு தொடரும். அதேசமயம் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தங்கு தடையின்றி கிடைக்கும். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்டும். மக்கள் பீதியடையாமல் வீடுகளில் தங்கி இருக்க வேண்டும். கட்டுப்பாட்டை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு திரிவேந்திர சிங் ராவத் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT