Published : 20 Mar 2020 07:38 AM
Last Updated : 20 Mar 2020 07:38 AM

திருமலை வந்த மகாராஷ்டிர பக்தருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி: திருப்பதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து திருமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த 78 வயது மதிக்கத்தக்க பக்தருக்கு கரோனா அறிகுறி இருந்ததால், அவருக்கு திருமலை அஸ்வினி தேவஸ்தான மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அதன் பின்னர் திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

திருமலையில் கடந்த ஒரு வாரமாக கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 21 பேர் கொண்ட பக்தர்கள் குழுகடந்த வாரம் சுற்றுலா புறப்பட்டனர்.

இவர்கள், காசிக்கு சென்று அங்கிருந்து திருமலைக்கு நேற்று வந்தனர். இதில் தாமோதர் என்பவர் கடும் காய்ச்சலால் அவதி பட்டார். மேலும் அவருக்கு தொண்டை வலி, இருமல் போன்றவற்றாலும் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவர் திருமலையில் தீவிர காய்ச்சலால் திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை அவரது உறவினர்கள், அஸ்வினி தேவஸ்தான மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இது கரோனா வைரஸ் அறிகுறியாக இருக்கலாமென மருத்துவர்கள் சந்தேகித்தனர்.

உடனடியாக அவரை ஒரு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவரின் ரத்தம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால், தேவஸ்தான அதிகாரிகள், பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். என். மகேஷ்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x