Published : 16 Mar 2020 09:47 AM
Last Updated : 16 Mar 2020 09:47 AM

‘கோவிட்-19’ வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை கையாளுவது எப்படி?- வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

டெல்லியில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு 68-வயது மூதாட்டிஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார். அவரது உடலை தகனம் செய்வதற்காக அவரது உறவினர்கள் நிகம்போத் சுடுகாட்டுக்கு கொண்டு சென்றபோது, இறந்தவர் உடல் மூலம் வைரஸ் பரவும் என்று ஊழியர்கள் அச்சம் தெரிவித்தனர், மேலும், உடலை தகனம் செய்யவும் மறுத்தனர்.

அதன்பின், மருத்துவ அதிகாரிகள் மேற்பார்வையில் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மூதாட்டியின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதனால், கோவிட்-19 காய்ச்சலால் உயிரிழந்த நபர்களின் உடல்கள் மூலமும்வைரஸ் பரவும் என்ற தகவல் பரவி வருகிறது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், “கோவிட்-19 வைரஸ் தொற்று எச்சில் மூலமாகத்தான் பரவுகிறது. எபோலா, நிபா வைரஸ் தொற்று போல் உயிரிழந்தவர்களின் உடல் மூலமாக கோவிட்-19 வைரஸ் பரவாது” என்று உறுதியாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, பிணவறையில் பணியாற்றும் ஊழியர்கள் கோவிட் -19 வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை எவ்வாறு கையாள வேண்டும் என்ற வழிமுறைகளை டெல்லி எய்ம்ஸ் தடயவியல் துறை வெளியிட்டுள்ளது.

அதில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அறியப்பட்ட அல்லது சந்தேகிக்கப்பட்ட நபர்களின் உடலை பாதுகாப்பாக வைக்க வேண்டும். உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது பிரத்யேக கருவிகளை பயன்படுத்த வேண்டும்.

இதுதொடர்பாக டெல்லி எய்ம்ஸ் தடயவியல் மருத்துவத் துறைத் தலைவர் சுதீர் குப்தா கூறியதாவது:

வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்இருமல் மற்றும் தும்மும் போதுவெளிப்படும் எச்சில் மூலம்தான் நோய் பரவுகிறது.

இதனால், பாதிக்கப்பட்ட நபரின்உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது பயப்பட தேவைஇல்லை. அதேநேரத்தில் வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளை விட கூடுதல் கவனம் தேவை. வைரஸ் பாதிப்பால் இறந்தவரின் உடலை மின், எரிவாயு மூலம் தகனம் செய்தாலோ அல்லது அடக்கம் செய்தாலோ வைரஸ் எதுவும் பரவாது.

இறந்தவர்களின் உடல்களை புதைப்பதாக இருந்தால், சிமென்ட் மூலம் கல்லறை ஏற்படுத்திய பிறகே புதைக்க வேண்டும்.

இவ்வாறு குப்தா தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பு(டபிள்யூஎச்ஓ) வெளியிட்ட வழிமுறைகளில் கூறியிருப்பதாவது:

கோவிட் - 19 வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் உடலைபிளாஸ்டிக் பைகளில் வைத்துதான் அடக்கம் செய்யவோ அல்லது பிணவறைக்கு கொண்டு செல்லவோ வேண்டும். இறந்தவர்களின் உடலில் இருந்து வெளியாகும் திரவங்களில் இருந்து மருத்துவ பணியாளர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள உடல் கவசம், சுவாச கவசம் போன்ற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x