Published : 16 Mar 2020 09:45 AM
Last Updated : 16 Mar 2020 09:45 AM

கோவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல்: நாடு முழுவதும் துறைமுகங்களில் 700-க்கும் மேற்பட்ட கப்பல்கள் காத்திருப்பு

புதுடெல்லி

கோவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்களில் 700-க்கும் மேற்பட்ட கப்பல்கள் காத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சீனாவில் உருவான கோவிட் 19 வைரஸ் காய்ச்சல் இன்று உலக நாடுகள் முழுவதிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் காய்ச்சலுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக உலகசுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 109 பேர் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோவிட் 19 வைரஸ் பரவி வரும் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசாரத்து, விமானங்களில் வரும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், பிப்ரவரி 1-ம்தேதிக்கு பிறகு கோவிட் 19 வைரஸ்பரவும் நாடுகளில் இருந்து வரும்கப்பல்களை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைக்குமாறு மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, தற்போது நாட்டில்உள்ள 12 பெரிய துறைமுகங்களில் 703 கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 25,504 பயணிகளும், கப்பல் பணிக்குழு உறுப்பினர்களும் உள்ளனர்.

துறைமுகத்தில் இருந்து கரையில் இறங்க அனுமதி வழங்கப்படாததால் கப்பல்களிலேயே அவர் தங்க வைக்கப்பட்டிருப்பதாக மத்திய கப்பல் போக்குவரத்து துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி, கப்பல்களில் உள்ள பயணிகளுக்கு தேவையான உணவுகள் வழங்கப்படுவதாகவும், அவர்களுக்கு தினமும் காய்ச்சல் பரிசோதனைநடத்தப்படுவதாகவும் தொடர்ந்து அவர்களை கண்காணித்து வருவதாகவும் கப்பல் போக்குவரத்து துறை உயரதிகாரி கூறினார்.

218 இந்தியர்கள் மீட்பு

கோவிட் 19 வைரஸ் வேகமாக பரவி வரும் இத்தாலியில் இருந்து218 இந்தியர்கள், ஏர் இந்தியா விமானம் மூலமாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர். நேற்று காலை டெல்லி வந்த அவர்கள், சாவ்லா பகுதியில் அமைந்துள்ள இந்தோ - திபெத் எல்லைக்காவல் படையின் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 15 நாள் மருத்துவக் கண்காணிப்புக்கு பிறகு அவர்கள் அனைவரும் வீடு திரும்புவார்கள் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு உத்தரவு

கோவிட் 19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக, தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களை அமைக்குமாறு அனைத்து துணை ராணுவப் படைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x