Published : 16 Mar 2020 09:39 AM
Last Updated : 16 Mar 2020 09:39 AM

813 பேருடன் தொடர்பில் இருந்தவைரஸால் பாதிக்கப்பட்ட டெல்லி நபர்

மேற்கு டெல்லியின் ஜானக்புரியைச் சேர்ந்த 46 வயதான ஒருவர் நொய்டாவில் பணிபுரிந்து வருகிறார். பணி நிமித்தமாக இத்தாலி சென்றிருந்த இவர், கடந்த மாதம் 20-ம் தேதி டெல்லி திரும்பினார். அப்போது அவரை விமான நிலையத்தில் பரிசோதித்தபோது காய்ச்சல் இல்லாததால் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் நொய்டா அலுவலகத்துக்கு வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் அவருக்கு காய்ச்சல் வந்ததையடுத்து, அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் அவருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது கடந்த 12-ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அவர் வசித்து வந்த வீடு பூட்டப்பட்டுள்ளது.

இதனிடையே, கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அந்த நபரின் 68 வயதான தாய் 13-ம் தேதி உயிரிழந்தார். நம் நாட்டில் இந்த வைரஸுக்கு உயிரிழந்த 2-வது நபர் இவர் ஆவார்.

இதனிடையே, அந்த டெல்லி நபர் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்துள்ளார் என சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அவர், தனது மனைவி 2 குழந்தைகள் உட்பட 813 பேருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இதில் 40 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் ஆவர். எனினும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த இவரது தாயுடன் 14 பேர் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x