Published : 16 Mar 2020 07:52 AM
Last Updated : 16 Mar 2020 07:52 AM

22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பதவி விலகிய நிலையில் ம.பி. சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவு

மத்திய பிரதேசத்தில் 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பதவி விலகிய நிலையில், சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என முதல்வர் கமல்நாத்துக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கடந்த வாரம் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, சிந்தியாவின் ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்பதவி விலகினர். இதனால் அக்கட்சியின் பலம் 114-ல் இருந்து 92 ஆககுறைந்தது. இதையடுத்து, முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் என்றும் பாஜக சார்பில் ஆளுநருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் முதல்வர் கமல்நாத்துக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

மத்திய பிரதேசத்தில் 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தங்கள் பதவிவிலகல் கடிதங்களை சட்டப்பேரவைத் தலைவருக்கு அனுப்பிஉள்ளதாக அறிந்தேன். இதுகுறித்துஅவர்கள் அச்சு மற்றும் மின்னணுஊடகங்களிலும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான செய்திகளை ஊடகங்களில் நான் பார்த்தேன்.

மேலும் அந்த 22 பேரும் இது தொடர்பாக கடந்த 10-ம் தேதி எனக்கும் கடிதம் எழுதி உள்ளனர்.

அரசியல் சாசன சட்டத்தின் 174 மற்றும் 175(2) ஆகிய பிரிவுகளின் கீழ், 16-ம் தேதி (இன்று) சட்டப்பேரவை கூட்டத் தொடர் எனது உரையுடன் தொடங்கும். உங்கள் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கருதுகிறேன். எனவே எனது உரை முடிந்ததும் நீங்கள் (முதல்வர்) பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும். இந்த நடைமுறைகளை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும்.

நம்பிக்கை வாக்கெடுப்பை அன்றைய தினமே முடிக்க வேண்டும். எந்தக் காரணத்துக்காகவும் தள்ளி வைக்கவோ, தாமதப்படுத்தவோ கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எனினும், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து பேரவைத் தலைவர்தான் முடிவு எடுக்க முடியும் என அமைச்சர் பி.சி.சர்மா தெரிவித்தார்.

இதுகுறுத்து சட்டப்பேரவைத் தலைவர் என்.பி.பிரஜாபதி நேற்று கூறும்போது, “நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இதுகுறித்து நாளை (இன்று) எனது முடிவை அறிவிப்பேன்” என்றார்.

கொறடா உத்தரவு

சட்டப்பேரவை இன்று கூடும் என ஆளுநர் அறிவித்த நிலையில், ராஜஸ்தானில் உள்ள ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் நேற்று போபால் திரும்பினர். எனினும் அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு செல்லவில்லை. ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x