Published : 12 Mar 2020 12:44 PM
Last Updated : 12 Mar 2020 12:44 PM

கலவரத்தால் மூடப்பட்ட ஜாமியா நூலகம் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவோடு மீண்டும் திறப்பு

புதுப்பொலிவோடு காட்சியளிக்கும் புனரமைக்கப்பட்ட ஜாமியா பல்கலை.நூலகம்.

புதுடெல்லி

சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து டிசம்பர் 15, 2019 அன்று அடித்து நொறுக்கப்பட்ட புதுடெல்லி ஜாமியா மிலியா நூலகம் புதுப்பிக்கப்பட்ட பின்னர் மீண்டும் புதன்கிழமை திறக்கப்பட்டது.

குடியுரிமைத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிராகக் காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த டிசம்பர் 15-ம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது. இது கலவரமாக மாறியது. மாணவர்கள் மீது போலீஸார் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தும் காட்சிகள் வைரலான நிலையில் நாடு முழுவதும் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல்கள் எழுந்தன. நூலகத்துக்குள் சென்ற போலீஸார் மாணவர்ளை தாக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், இதை போலீஸார் மறுத்துவந்தனர். பின்னர் இதுகுறித்து வீடியோ ஒன்றும் வெளியானது. கலவரத்தால் மூடப்பட்ட பல்கலைக்கழக நூலகம் கிட்டத்தட்ட 3 மாதங்கள் கடந்த பிறகு மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்க்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் ஜாகிர் ஹுசைன் நூலகம் விரிவான புனரமைப்பிற்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. எல்.ஈ.டி விளக்குகள் மற்றும் புதிய மற்றும் வசதியான நாற்காலிகள் நிறுவுவதன் மூலம் மாணவர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

800 மாணவர்களை அமர வைக்கும் திறன் மற்றும் ஒரு வாசிப்பு மண்டபம், ஆராய்ச்சி தளம், குறிப்பு மற்றும் கால இடைவெளிகள் மற்றும் 150 கணினிகளைக் கொண்ட டிஜிட்டல் வள மையம் ஆகியவற்றைக் கொண்ட இந்த நூலகம் புதன்கிழமை தனது அனைத்து சேவைகளையும் மீண்டும் தொடங்கியுள்ளது.

தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை விரிவாக மேம்படுத்துவதன் மூலம் வரும் நாட்களில் அதன் பயனர் சேவைகளை வலுப்படுத்த நூலகம் முன்மொழிந்துள்ளது. பெரும் முரண்பாடுகள் இருந்தபோதிலும், நூலகம் அதன் பட்ஜெட் ஒதுக்கீட்டை முழுமையாகப் பயன்படுத்தவும் மின்னணு தரவுத்தளங்களுக்கான சந்தாவை புதுப்பிக்கவும் முடிந்தது என்பது மிகுந்த திருப்தி அளிக்கிறது

நூலகம் மூடப்பட்ட மூன்று மாதங்களில், காலியாக இருந்த மத்திய நூலகத்தின் பணியாளர்களை நியமிக்கப்பட்டனர். அதன்மூலம் பல ஆசிரியர்களின் செயல்பாடு மற்றும் துறைசார் நூலகங்கள் மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன

இவ்வாறு பல்க்கலைகக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x