Published : 11 Mar 2020 07:17 AM
Last Updated : 11 Mar 2020 07:17 AM

கர்நாடக மாநிலத்தில் ஆரம்பப் பள்ளிகள் மூடல்: வெளிநாட்டில் இருந்து வந்த 4 பேர் பாதிப்பு

இரா.வினோத்

அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து பெங்களூரு வந்த 2 மென்பொருள் பொறியாளர்கள் உட்பட 4 பேர் கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்படுள்ளனர்.

இதுகுறித்து பெங்களூரு ராஜீவ் காந்தி அதிநவீன மருத்துவமனையில் அமைச்சர் சுதாகர் கூறியதாவது:

பெங்களூருவில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றும் 46 வயதுடைய நபர் தன் மனைவி (44), மகள் (13) ஆகியோருடன் கடந்த 28-ம் தேதி அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து துபாய்க்கு சென்ற அவர், பின்னர் மார்ச் 1-ம் தேதி பெங்களூரு திரும்பினார்.

அதன்பிறகு, காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கோவிட் 19 வைரஸ் தாக்கியி ருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவரது மனைவி, மகளுக்கும் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதே போல, பிரிட்டனில் இருந்து கடந்த 6-ம் தேதி மங்களூரு வந்த 50 வயதுடையதொழிலதிபர் ஒருவருக்கும் கோவிட் 19 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பெங்களூருவில் உள்ள ராஜீவ்காந்தி அதிநவீன மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவிட் 19 வைரஸ் நோய் பரவாமல் தடுக்க முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோவிட் 19 வைரஸ் பாதிப்பு கர்நாடகாவில் பெரும் பீதியை ஏற்படுத்திய நிலையில், பெங்களூரு மாநகராட்சி மற்றும் ஊரக மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மழலையா் பள்ளிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. அதே போல், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் ஆரம்ப பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை காலவரை யற்ற விடுமுறை அறிவிக்கப் பட்டிருக்கிறது.

வணக்கம் கூறுங்கள்

இதனிடையே, கோவிட் 19 வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க, பொதுமக்கள் ஒருவருடன் ஒருவர் கைக்குலுக்குவதை தவிர்த்து, கையெடுத்து கும்பிட்டு வணக்கம் கூற வேண்டும் என கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x