Published : 09 Mar 2020 08:19 AM
Last Updated : 09 Mar 2020 08:19 AM

‘நாரி சக்தி' விருது பெற்றவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிக்கவும் தண்ணீர் சேமிப்புக்கும் பாடுபட வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

இந்தியாவில் இருந்து ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையை முற்றிலுமாக ஒழிக்க ‘நாரி சக்தி' விருது பெற்றவர்கள் பாடுபட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பின்தங்கிய நிலையில் உள்ளமகளிருக்கு அதிகாரம் கிடைப்பதற்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் பாடுபட்ட பெண்களுக்கு ஆண்டுதோறும் ‘நாரி சக்தி' விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ‘நாரி சக்தி' விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 15 பெண் சாதனையாளர்கள் இந்த விருதினை பெற்றனர்.

இதனையடுத்து, விருது பெற்ற பெண்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

பெரும் சவால்களுக்கு மத்தியில் மிகக் கடினமான பணிகளை நீங்கள் செய்து வருகிறீர்கள். அதனை அங்கீகரிக்கும் விதமாகவே உங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

நாட்டில் நிலவும் சமூக ரீதியிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நீங்கள் முன்வர வேண்டும். குறிப்பாக, ஊட்டச்சத்து குறைபாட்டை முற்றிலுமாக ஒழிப்பதற்கும், தண்ணீர் சேமிப்புக் கும் பாடுபட வேண்டும்.

‘நாரி சக்தி' விருது பெற்றவர்களில் பிஹாரைச் சேர்ந்த பீனா தேவி (காளான் வளர்ப்பு தொழில்முனைவோர்), உத்தரபிரதேசத்தை சேர்ந்த கலாவதி தேவி(திறந்தவெளி மலம் கழித்தலை ஒழிக்க பாடுபடுபவர்), காஷ்மீரைசேர்ந்த அரிஃபா ஜன் (வழக்கொழிந்த கைவினைக் கலையை புதுப்பித்தவர்) உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.

இவ்வாறு மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x