Last Updated : 02 Mar, 2020 06:17 PM

 

Published : 02 Mar 2020 06:17 PM
Last Updated : 02 Mar 2020 06:17 PM

நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கும் 3-வது முறையாக தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு: நெருப்புடன் விளையாடுகிறீர்கள்: நீதிபதி கண்டிப்பு

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளிகள் : கோப்புப்படம்

புதுடெல்லி

2012 மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் நாளை தூக்கு தண்டனை நிறைவேற்ற இருந்தநிலையில் அதை மறு உத்தரவு வரும்வரை நிறுத்திவைத்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்துள்ளதால், அந்த மனு மீது பரிசீலனை முடியும் வரை தூக்குத் தண்டனை நிறைவேற்ற முடியாது என்பதால் நிறுத்தப்பட்டது.

ஏற்கனவே ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட நிலையில் இப்போது மூன்றாவது முறையாக நிறுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது
ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி விசாரணை நீதிமன்றம் டெத் வாரண்ட் பிறப்பித்தது.

ஆனால், இருமுறையும் குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்ததால் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. புதிய தேதியின்படி, குற்றவாளிகள் 4 பேருக்கும் (நாளை) மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கிலிட வேண்டும் என்று டெல்லி விசாரணை நீதிமன்றம் 3-வது டெத் வாரண்ட் பிறப்பித்தது.

தூக்கு தண்டனை குற்றவாளிகளில் பவன் குமார் குப்தா தவிர மற்ற மூவர்களான அக்சய் குமார் சிங், வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கான அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்துவிட்டன.

உச்ச நீதிமன்றத்தில் பவன் குமார் தாக்கல் செய்த சீராய்வு மனுவை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே குற்றவாளி அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா இருவரும் தங்களின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும், டெத் வாரண்ட்டை ரத்து செய்ய வேண்டும், தங்கள் தரப்பு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

டெல்லி நீதிபதி தர்மேந்திர ராணா முன்னிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் ஆஜரானார். அப்போது நீதிபதி தர்மேந்திர ராணா, மனுதாரர்கள் மனுவை தள்ளுபடி செய்வதாகவும்,தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது எனவும் அறிவித்தார்.

அப்போது வழக்கறிஞர் ஏ.பி.சிங் கூறுகையில், "பவன் குமார் சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதால், குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்திருக்கிறோம். ஆதலால், தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகமும், குற்றவாளி பவன் குமார் குப்தா கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளதை உறுதி செய்தது.

நீதிபதி தர்மேந்திர ராணா கூறுகையில், " நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள், தவறான நகர்வு இருந்தால் விளைவு மோசமானதாக இருக்கும். " என மனுதாரர் வழக்கறிஞர் ஏ.பி.சிங்கை கண்டித்தார். மேலும், " குடியரசுத் தலைவரிடம் கருணை மனு பரிசீலனையில் இருப்பதால், தூக்கு தண்டனையை நாளை நிறைவேற்ற முடியாது. ஆதலால், தூக்குத்தண்டனை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கிறேன்" நீதிபதி உத்தரவிட்டார்.

இதனால் நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் நாளை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x