Published : 09 Aug 2015 06:16 PM
Last Updated : 09 Aug 2015 06:16 PM
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ட்விட்டரில் மட்டுமே செயல்படுகிறது என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையொட்டி ஆளும் ஐக்கிய ஜனதா கூட்டணியும் பாஜக கூட்டணியும் இப்போதே தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி பிஹாரின் கயா பகுதியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை பிஹாரின் கயாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார். அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டார்.
அதில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை 'யூனியன் ட்விட்டர் கவர்மென்ட்' என்று அழைக்கலாம். மோடி அரசு சமூக வலைத்தளமான ட்விட்டரில் மட்டுமே செயல்படுகிறது. மோடி அளித்த வாக்குறுதிகள் காற்றில் பறக்கின்றன. விவசாயிகளின் நலனைக் காப்பேன் என்று அவர் வாக்குறுதி அளித்தார். அதற்கு நேர்மாறாக விவசாய நிலங்களைப் பறிக்க நிலம் கையகப்படுத்தும் திருத்த மசோதாவை அமல்படுத்த முயற்சிக்கிறார்.
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பேன். அந்த வகையில் ஒவ்வொரு குடிமகனுக்கு ரூ.15 லட்சம் முதல் 20 லட்சம் வரை கிடைக்கும் என்றார். அந்தப் பணம் தங்களுக்கு கிடைக்கும் என்று மக்கள் இன்னமும் காத்து கொண்டிருக்கிறார்கள்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிஹார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். 14 மாதங்களான பிறகும் எதுவும் நடக்கவில்லை. பின்தங்கிய மாநில நிதி பிஹாருக்கு வழங்கப்படாததால் ரூ.50 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நிதிஷ் குமார் விமர்சித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 29-ம் தேதி நிறைவடைகிறது. அந்த மாநிலத்தில் அக்டோபரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT