Last Updated : 22 Feb, 2020 06:29 PM

 

Published : 22 Feb 2020 06:29 PM
Last Updated : 22 Feb 2020 06:29 PM

காஷ்மீரில் இன்னும் 250 தீவிரவாதிகள் இருக்கிறார்கள்; 2020-ல் 25 பேர் கொல்லப்பட்டனர்

காஷ்மீரில் பட்டியலிடப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை 250 ஆகக் குறைந்துள்ளது. அதேநேரத்தில் 2020-ல் மட்டும் கிட்டத்தட்ட 25 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர் தில்பாக் சிங் தெரிவித்தார்.

இந்த ஆண்டு இதுவரை சர்வதேச எல்லை வழியாக மூன்று தீவிரவாதிகள் மட்டுமே பள்ளத்தாக்குக்குள் ஊடுருவியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர் தில்பாக் சிங் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"பட்டியலிடப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை முன்பு இருந்ததைவிடக் குறைந்துவிட்டது. சுமார் 240 முதல் 250 பட்டியலிடப்பட்ட தீவிரவாதிகள் பள்ளத்தாக்கில் உள்ளனர், கடந்த இரண்டு மாதங்களில், ஊடுருவிய தீவிரவாதிகள் 3 பேர். அவர்களில் ஒருவர் ஜெய்ஷ் இ முகம்மது போராளி. புல்வாமா மாவட்டத்தில் சமீபத்தில் டிரால் நகரத்தில் ஒரு நடவடிக்கையின் மூலம் கொல்லப்பட்டார்.

2020 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 10 மற்றும் ஜம்மு பிராந்தியத்தில் இரண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுவரை, இந்த நடவடிக்கைகளில் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பள்ளத்தாக்கில் ஒன்பது பயங்கரவாதச் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், ஜம்முவில் மூன்று அல்லது நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது மட்டுமின்றி பயங்கரவாத நடவடிக்கைகளை ஏதேனும் ஒரு வடிவத்தில் ஊக்குவிப்பதில் மற்றும் ஆதரிப்பதில் சட்டவிரோதமாக வேலைசெய்துவந்த 40க்கும் மேற்பட்ட மறைமுகத் தீவிரவாதப் பணியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் சமூக ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்துவது மெய்நிகர் தனியார் நெட்வொர்க்குகள் (வி.பி.என்) மூலம் கண்காணிக்கப்பட்டது. இதில், தவறான நபர்கள் நிறைய பேர் சிக்கினர். அவர்களுக்கு எதிராக காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பல வழக்குகள் வந்துள்ளன. உதாரணமாக, வசீம் தார் என்பவர் பொது உணர்வைத் தூண்டும் நோக்கத்துடன் (சமூக) ஊடகங்களில் பொறுப்பற்ற சில உள்ளடக்கங்களை வெளியிட்டதற்காக ஹண்ட்வாராவில் வசிப்பவர் கைது செய்யப்பட்டார். இதுபோன்ற சம்பவங்களை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம், வலைதளங்களில் தவறான பதிவுகள் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், 'ஹபீஸ் சுஹைல்' என்ற பெயரில் உள்ள ஒருவர், மூத்த காவல் கண்காணிப்பாளர் தரத்தில் உள்ள ஒரு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் ஹபீஸ் சுஹைல் என்ற பெயரில் அச்சுறுத்தலை வெளியிட்டவரின் உண்மையான பெயரை நாங்கள் சரிபார்த்துள்ளோம். தலிபோரா புல்வாமாவில் வசிக்கும் அந்தப் பயனரின் உண்மையான பெயர் சுஹைல் வாலி என்பதாகும். நாங்கள் அவரது வீட்டில் ஒரு தேடலை நடத்தினோம். ஆனால் அவர் தற்போது துபாயில் இருப்பதாக அவரது பெற்றோர் எங்களிடம் தெரிவித்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும் நடவடிக்கை எடுப்போம்''.

இவ்வாறு ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர் தில்பாக் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x