Last Updated : 20 Feb, 2020 04:55 PM

 

Published : 20 Feb 2020 04:55 PM
Last Updated : 20 Feb 2020 04:55 PM

அயோத்தியில் புத்தக் கோயிலுக்கும் இடம் கொடுங்கள்: மத்திய அமைச்சர் கோரிக்கை

சர்ச்சைக்குரிய அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டு, மசூதி கட்டுமானத்திற்கும் அங்கு 5 ஏக்கர் வழங்கவும் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் தற்போது அங்கு புத்தர் கோவில் கட்டவும் மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் ராம ஜன்மபூமி-பாபர் மசூதி வழக்குகளின் தீர்ப்பில் ராமர்கோயில் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கியது. அத் தீர்ப்பில் ''ராமர் கோயில் கட்டுவதற்காக இந்துக்களின் சர்ச்சைக்குரிய இடத்தை வழங்கியதுடன், அயோத்தியில் மாற்று இடத்தில் மசூதி கட்டிக்கொள்ள சன்னி வக்ஃப் வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலத்தை வழங்கவேண்டும்'' எனவும் உ.பி. அரசுக்கு உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம், அதில் ''சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளவும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டது. அதுமட்டுமல்லாமல் அந்த அறக்கட்டளை வசம் 2.77 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட வேண்டும். அந்தக் கோயிலின் கட்டுமானப் பணிகளை அந்த அறக்கட்டளை கண்காணிக்க வேண்டும். அதற்குரிய உறுப்பினர்களை 3 மாதங்களில் நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டது.

அதன்படி, ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளை அமைத்து ராமர் கோயில் பணிகள் தொடக்கப்படும் நிலையில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, தற்போது அயோத்தியில் புத்தக் கோயிலுக்கும் இடம் கோட்டு கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் பாண்டு அதாவலே ஏஎன்ஐயிடம் இன்று (வியாழக்கிழமை) கூறியதாவது:

அயோத்தியில் சுமார் 10 முதல் 20 ஏக்கர் நிலம் பவுத்தர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும், அயோத்தியில் ஒரு பெரிய புத்த கோவில் கட்டப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் விரைவில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திப்பேன்.

எனது கோரிக்கையை கவனத்தில் கொள்ளாவிட்டால், பவுத்த எண்ணங்களை நம்புகிற நாங்கள் அயோத்தியில் ஒரு நிலத்தை கையகப்படுத்தி, அங்கு ஒரு புத்த கோவிலைக் கட்டுவோம்.

இந்து மதத்தின் செல்வாக்கு அதிகரிப்பதற்கு முன்னர், அசோக பேரரசரின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் பல புத்த கோவில்கள் இருந்தன. சங்கராச்சாரியார் மற்றும் இந்து மதத்தின் செல்வாக்கால், பல இடங்களில் கோயில்கள் கட்டப்பட்டன.

பின்னர் முகலாயர்கள் இந்தியா வந்ததும் கோயில்களை இடித்து மசூதிகளை கட்டத் தொடங்கினர். எவ்வாறாயினும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின்னர் ராமர் கோயில் கட்டுமானத்தை தொடர அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

எனவே இதில் அயோத்தியில் புத்த கோயிலுக்கும் சிறிது இடம் ஒதுக்கித் தரவேண்டும் என்ற கோரிக்கையை இதன்மூலம் எழுப்ப விரும்புகிறேன்.

இவ்வாறு மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x