Published : 19 Feb 2020 06:13 PM
Last Updated : 19 Feb 2020 06:13 PM
டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம் நடத்துபவர்கள் போராட உரிமை இருக்கிறது, அதேசமயம், மற்ற குடிமக்களின் உரிமையை மதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவினர் வலியுறுத்தினர்.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக டெல்லியின் ஷாகின்பாக் பகுதியில் இரண்டு மாதங்களாகத் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பெண்கள், குழந்தைகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யூனியன் பிரதேசமான டெல்லியில் இஸ்லாமிய மக்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய உள்துறை அதிகாரிகளும், டெல்லி போலீஸாரும் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தநிலையில், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஷாகின் பாக் பகுதியில் போராட்டம் நடத்திவருகின்றனர்.
ஷாகீன் பாக் பகுதியில் நடக்கும் போராட்டத்தால் அப்பகுதியில் மக்களால் போக்குவரத்து பெரும் இடையூறாக இருப்பதாக் குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரு சட்டத்தை எதிர்த்து ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்த உரிமை உண்டு.
அதேசமயம் மற்றவர்களின் உரிமைகளும் பாதிக்கப்படக் கூடாது என்று தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் பேச்சு நடத்த மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் ஆகியோரை பேச்சு நடத்த அமர்த்தியது.
சாதனா ராமச்சந்திரன், சஞ்சய் ஹெக்டே இருவரும் ஷாகீன் பாக் போராட்டக் குழுவினருடன் புதனன்று பேச்சு நடத்தினர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் போராட்டக்காரர்களுக்கு விளக்கி சாதனா ராமச்சந்திரனும், ஹெக்டேவும் கூறினர்.
அப்போது கடந்த 2 மாதங்களாக அங்குப் போராட்டம் நடத்திவரும் சாதனா ராமச்சந்திரனிடம் ஒரு பெண் எழுந்து பேசினார். அப்போது, வாருங்கள் பேசலாம் என்று சாதனா ராமச்சந்திரன் தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் எந்த பேச்சுவார்த்தையும், போராட்டக்காரர்கள் முன், ஊடக்தினர் முன்புதான் நடக்க வேண்டும் என்று தெரிவித்தார்
அதற்குச் சாதனா ராமச்சந்திரன் பேசுகையில், " போராட்டம் நடத்த உங்களுக்கு உரிமை உண்டு அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. ஆனால், மற்ற குடிமக்களின் உரிமையும் பாதிக்கப்படக்கூடாது அதை மதிக்க வேண்டும். இப்படி அனைவரும் சாலையை மறித்து போராட்டம் நடத்தினால், மக்கள் எங்குச் செல்வார்கள். நாம் அனைவரும் சேர்ந்து பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். நாம் ஒவ்வொருவரையும் கவனிக்க வேண்டும்.
ஊடகத்தினர் முன் நீங்கள் வேண்டுமானால் பேசுங்கள் எங்களால் பேச முடியாது. நாங்கள் 4 நாட்கள் பேச்சு நடத்த அவகாசம் தரப்பட்டுள்ளது. அதன்பின் வேறு வழியில் பேசுவோம்" எனத் தெரிவித்தார். இதையடுத்து தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் வழக்கறிஞர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT