Last Updated : 14 Feb, 2020 07:49 PM

 

Published : 14 Feb 2020 07:49 PM
Last Updated : 14 Feb 2020 07:49 PM

சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து,  கேலி செய்து பதிவுகள்: மாநிலங்களவை அரசு உயரதிகாரி பதவியிறக்கம்

ராஜ்யசபா தலைமைச் செயலகத்தில் உதவி இயக்குநர் பதவியிலிருக்கும் உருஜுல் ஹசன் பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக அமைச்சர்கள், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஆகியோருக்கு எதிராக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருப்பதாக உருஜுல் ஹசன் மீது புகார் எழுந்தது.

இது தொடர்பாக தலைமைச் செயலகம் அளித்த மெமோவில், “மாண்பு மிகு பிரதமர், சில மத்திய அமைச்சர்கள் மற்றும் முதல்வர்களை அவதூறு செய்யும் விதமாகவும், கேலி செய்யும் விதமாகவும், புண்படுத்தும் விதமாகவும் பதிவுகளைப் பகிர்ந்ததன் அடிப்படையில் இவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது உறுதியான படியால் உருஜுல் ஹசன் என்ற உதவி இயக்குநர் (பாதுகாப்பு) பதவியிறக்கம் செய்யப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 2018 முதல் மே 2018 வரை ஹசன் முகநூலில் பதிவிட்டது குறித்து யாரோ ஒருவர் புகார் எழுப்ப விசாரணை நடைபெற்று வந்தது. ஆனால் இவையனைத்தும் மற்றவர்களின் பதிவுகளின் பகிர்வுதான் என்று சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தி இந்து ஆங்கிலம் நாளிதழ் மூலம் ஹசனைத் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சி பயனளிக்கவில்லை. இவர் 5 ஆண்டுகளுக்கு பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார், இந்த 5 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் அவர் உதவி இயக்குநர் பதவியில் தொடர முடியாது.

இதற்கான உத்தரவில், ‘ஹசன் அரசியல் நடுநிலைமையைத் தவறிவிட்டார்’ என்று கூறப்பட்டுள்ளது. மத்திய சிவில் சேவைகள் நடத்தை விதிகள், 1964-ன் படிஅரசு அதிகாரிகள், ஊழியர்கள் எந்த வித அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடுவது கடும் நடவடிக்கைகளுக்கு உரியதாக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் எந்த ஒரு கட்சியிலும் இணைந்து பணியாற்றக் கூடாது. தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகளுக்கு எந்தவிதமான பயனளிக்கும் விதத்திலும் அவர்கள் நடக்கக் கூடாது. ஏன் தான் வாக்களித்ததைக் கூட பொதுவெளியில் அவர்கள் வெளியிடக்கூடாது.

இது தொடர்பான விசாரணைக் கமிட்டி அரசியல்வாதியான நடிகர் ஒருவரின் வாட்ஸ் அப் பதிவு ஒன்றை ஃபார்வர்ட் செய்தது தொடர்பான மே 10, 2018 சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பான, “ஒரு செய்தியை ஃபார்வர்ட் செய்வது, பகிர்வது என்பது அந்தச் செய்தியை ஏற்பதாகத்தான் பொருள்” என்பதை இந்த விவகாரத்திலும் எழுப்பி உருஜுல் ஹசனுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் டெல்லி தலைமைச் செயலர் ராகேஷ் மேத்தா இது தொடர்பாகக் கூறும்போது, அரசு ஊழியர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் அரசியல் தொடர்பான விதிமுறைகளை மீறக் கூடாது. விதிகள் இதனை தெள்ளத் தெளிவாகக் கூறியிருக்கின்றன என்றார், ஆனாலும் இந்த விதிமுறைகள் பழமையானவை சமூக ஊடகக் காலக்கட்டமான இந்தக் காலக்கட்டத்தில் இவை மாற்றத்திற்குரியதே என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x