Published : 10 Aug 2015 10:56 AM
Last Updated : 10 Aug 2015 10:56 AM
வரும் 16, 17 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரசு நாடுகளில் (யுஏஇ) பயணம் செய்கிறார்.
வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அந்நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்துகிறார். அங்குள்ள இந்தியர்கள் மத்தியிலும் உரையாற்றுகிறார்.
பிரதமரின் பயணம் குறித்த முறையான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. என்றாலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இதனை தெரிவித்தன.
பிரதமர் தனது 2 நாள் பயணத்தில் அபுதாபி மற்றும் துபாய்க்கு செல்கிறார். இப்பயணம் மூலம் இந்தியா யுஏஇ இடையே பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகள் மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1981-ம் ஆண்டு யுஏஇ சென்றார். இந்நிலையில் கடந்த 34 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியப் பிரதமர் யுஏஇ செல்கிறார்.
பயங்கரவாத எதிர்ப்பு, கடற்பயண பாதுகாப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் சிறிதளவே முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமரின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா யுஏஇ இடையிலான நட்புறவில், முக்கியத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் ஆகியவை முக்கிய இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் பிரதமரின் பயணத்தால் இவற்றில் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி, இந்திய ஏற்றுமதியில் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக யுஏஇ உள்ளது. 2013-14-ல் 30 பில்லியன் டாலர்களுக்கு மேல் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இங்கு இந்திய சமூகத்தினர் பெருமளவில் வசிக்கின்றனர். துபாய் கிரிக்கெட் அரங்கில் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அங்குள்ள இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT