Published : 11 Feb 2020 02:46 PM
Last Updated : 11 Feb 2020 02:46 PM
70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கத் தயாராகியுள்ளது.
கடும் பிரச்சாரங்களுக்கு இடையே வளர்ச்சி மற்றும் மக்கள் நலத்திட்டங்களை முன்னிலைப் படுத்திய கேஜ்ரிவாலின் வாக்குறுதிகளுக்கும், கடந்த ஆட்சிக்கும் மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளதாக அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, “நான் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டேன், மக்கள் பாஜகவை நிராகரித்து விட்டனர். வளர்ச்சி மட்டுமே பேசும், என்.ஆர்.சி., என்.பி.ஆர், சிஏஏ வேலைக்கு ஆகாது. இவற்றையும் டெல்லி மக்கள் நிராகரித்து விட்டனர்” என்றார்.
ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் மனோஜ் ஜா கூறும் போது, “டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு அறிவிப்பது என்னவெனில் விஷம் கக்கும் பிரச்சாரங்கள் அறிக்கைகளால் எந்த ஒரு பயனும் இல்லை என்பதையே, டெல்லி மக்கள் ஆம் ஆத்மி சார்பாக அளித்த தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றமளிக்கவில்லை” என்றார்.
பாஜகவில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கூறும்போது, “அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் டெல்லி வளர்ந்திருக்கிறது என்றே நம்புகிறேன், பாஜக முயன்று பார்த்தது ஆனால் மக்களை திருப்தி செய்ய முடியவில்லை” என்றார்.
அரசியல் உத்தி வகுப்பாளர், பிரசாந்த் கிஷோர், “இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றிய டெல்லி மக்களுக்கு நன்றி” என்று ட்வீட் செய்துள்ளார்.
ஆம் ஆத்மியின் வெற்றி குறித்து பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கூறும்போது, வாக்காளர்கள்தான் அரசர்கள் என்றார்.
ஆம் ஆத்மியின் தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய் சிங் கூறும்போது, “உங்கள் பிள்ளை கேஜ்ரிவாலை பயங்கரவாதி என்று அழைத்தனர். இன்று மக்கள் கூறிவிட்டனர் அவர் சிறந்த தேசப்பற்றாளர் என்று. அவர்கள் சொன்னார்கள் இது இந்துஸ்தான் - பாகிஸ்தான் மேட்ச் என்றனர், இப்போது இந்துஸ்தான் வென்றது இந்துஸ்தான் வென்றது, இந்துஸ்தான் வென்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT