

உமர் அப்துல்லா கூறியதாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் எடுத்துக் கூறியது உண்மையில் உமர் அப்துல்லா கூறியதல்ல, அது அங்கதச் செய்தி இணையதளம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது என்று மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
“நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பதிலளித்த பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் 2 முன்னாள் முதல்வர்கள் கூறியது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கூறினார், ஆனால் பிரதமர் மோடி மேற்கோள் காட்டிய கூற்று அங்கத-நகைச்சுவை இணையதளமான ‘ஃபேக்கிங் நியூஸ்’ (Faking News) என்ற இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது” என்று சீதாராம் யெச்சூரி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து சிபிஎம் கட்சியின் பொலிட்பீரோ உமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்தி மீது பொதுப்பாதுகாப்புச் சட்டத்தை ஏவி விட தவறான மேற்கோள்களைக் கொண்டு தவறான குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களைக் கொண்டு வர முயற்சிக்கின்றனர் என்று சாடியது. “போலிச் செய்தியின் அடிப்படையில் மோடி அரசு தீங்கான பொதுப்பாதுகாப்புச் சட்டத்தை உமர் மற்றும் முப்தி மீது பிரயோகப்படுத்தியுள்ளது, இதிலிருந்தே ஜம்மு காஷ்மீரில் எதுவும் இயல்பாக இல்லை என்று தெரிகிறது” என்று பொலிட்பீரோ அறிக்கை தெரிவிக்கிறது.
பிப்.6ம் தேதி பிரதமர் மோடி, உமர் அப்துல்லா கூறியதாக மேற்கோள் காட்டிய கூற்றில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ன் நீக்கம் பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தி காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்கும் என்று நாடாளுமன்றத்தில் கூறினார். ஆனால் இது அங்கத-நகைச்சுவை செய்தி இணையதளமான ஃபேகிங் நியூஸ்-லிருந்து எடுக்கப்பட்டது என்று சீதாராம் யெச்சூரி இப்போது தெரிவித்துள்ளார்.
இதனையடுத்துதான் உமர் மற்றும் முப்தி மீது பொதுப்பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ’பிரையன் கூறும்போது, மோடி பெயரைக் குறிப்பிடாமல் ‘ஒரு எம்.பி. போலிச் செய்தியின் மூலம் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தினால் உரிமை மீறல் எழுப்பலாம்’ என்று சூசகமாக தன் ட்விட்டரில் தெரிவித்தார்.
தவறவிடாதீர்!