Last Updated : 03 Feb, 2020 04:49 PM

 

Published : 03 Feb 2020 04:49 PM
Last Updated : 03 Feb 2020 04:49 PM

என் கேள்விகளைப் பார்த்து பயப்படாதீர்கள்: நிதியமைச்சரைக் கிண்டல் செய்த ராகுல் காந்தி

வேலையின்மை குறித்து நான் கேட்கும் என் கேள்விகளைப் பார்த்து பயப்படாதீர்கள். இளைஞர்கள் சார்பில் கேட்கிறேன் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எந்தவிதமான புள்ளிவிவரங்களையும் அளிக்கவில்லை.

பட்ஜெட் முடிந்த பின் நாடாளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களுக்குப் பேட்டி அளித்த ராகுல் காந்தி, "எல்லாம் பேச்சு மட்டும், எதுவும் உறுதியானதாக இல்லை. இதுதான் அரசின் மனநிலை. இளைஞர்களின் இன்றைய மிகப்பெரிய பிரச்சினை வேலையின்மைதான். நிர்வாக ரீதியில் எந்தப் புதிய திட்டங்களையும் நான் பார்க்கவில்லை. பின் எவ்வாறு புதிய வேலைவாய்ப்பு உருவாகும்" எனத் தெரிவித்திருந்தார்

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் நிர்மலா சீதாராமனைக் கிண்டல் செய்து கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், " நிதியமைச்சரே! என்னுடைய கேள்விகளைப் பார்த்து அச்சப்படாதீர்கள். நான் இளைஞர்களின் சார்பில்தான் கேட்கிறேன். அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. இந்த தேசத்தின் இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்கிறார்கள். ஆனால் உங்கள் அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தோல்வி அடைந்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நிர்மலா சீதாராமன் வேலைவாய்ப்பு குறித்த தெரிவித்த அறிக்கையையும் அந்த ட்விட்டரில் ராகுல் காந்தி இணைத்து, இதில் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த புள்ளிவிவரங்கள் எங்கே? எனக் கேட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x