Published : 01 Feb 2020 04:18 PM
Last Updated : 01 Feb 2020 04:18 PM
2020-21 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மூத்த குடிமக்கள் நலனுக்காக ரூ.9,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அவர் பேசுகையில், "மாற்றுத்திறனாளிகள், மற்றும் மூத்த குடிமக்கள் நலத் திட்டங்களுக்காக ரூ.9,500 கோடி 2020-21 ஆம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
சத்துணவு, சரிவிகிதம் மற்றும் அதுதொடர்பான திட்டங்களுக்காக ரூ.35 ஆயிரத்து 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
எஸ்.சி.பிரிவினர் மற்றும் இதர பிரிவினர் மேம்பாட்டுக்காக ரூ.85 ஆயிரம் கோடி 2020-21 ஆம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது, பழங்குடியினர் பிரிவு நலனுக்காக ரூ.53 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைக்கப்படும். இதுதவிர ஹரியாணா, உ.பி. அசாம், குஜராத், தமிழகத்தில் அருங்காட்சி்யகம் அமைக்கப்படும்.
இதுதவிர சுற்றுலாத்துறை அமைச்சகத்துக்கு ரூ.2,500 கோடியும், கலாச்சாரத்துறை அமைச்சகத்துக்கு ரூ.3,150 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 2024-ம் ஆண்டுக்குள் மத்திய அரசின் ஜன் அவுஷதி கேந்திரா திட்டம் விரிவுபடுத்தப்படும். தற்போது 6 ஆயிரம் ஜன் அவுஷதி கேந்திரா மருந்துக் கடைகள் உள்ளன.
2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஜன் அவுஷதி கேந்திரா எனப்படும் ஜெனரிக் மருந்துக் கடைகள் திறக்கப்படும். இந்தக் கடைகளில் 2 ஆயிரம் மருந்துகள், 300 சர்ஜிகல் பொருட்கள் விற்பனை செய்யப்படும். இதன் நோக்கம், தரமான மருந்துகள் ஏழைகளுக்குக் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும். சுகாதாரத்துக்காக மக்கள் செலவிடும் தொகையைக் குறைத்து அரசு அதிகமாக செலவிட வேண்டும் என்பதுதான்'' என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT