Published : 30 Jan 2020 10:30 AM
Last Updated : 30 Jan 2020 10:30 AM
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மதி கட்சிக்கு ஆதரவளிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி: பிப்ரவரி 8-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. டெல்லி தலைநகர் என்பதால் இங்கு பல்வேறு மாநில மக்களும் வசிக்கின்றனர். எனவே அந்த மாநில மக்களின் ஆதரவை திரட்ட முயன்று வருகின்றன.
மேற்குவங்க முதல்வர் மம்தாவின் ஆதரவை பெற காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இருகட்சிகளும் முயன்றன. ஆனால் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் மம்தா பானர்ஜி காங்கிரஸுடன் இணைந்து செயல்பட முடியாது என அறிவித்து விட்டார். அதுபோலவே டெல்லியில் சோனியா காந்தி கூட்டிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தையும் மம்தா பானர்ஜி புறக்கணித்து விட்டார்.
இந்த நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிப்பதாக திரணாமுல் காங்கிரஸ் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் எம்.பி. டெரிக் ஓ பிரையன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் டெல்லியில் உள்ள மேற்குவங்க மக்களும், திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்களும் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT