Published : 25 Jan 2020 11:05 AM
Last Updated : 25 Jan 2020 11:05 AM
பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்த இஸ்லாமியர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என சிவசேனா கூறியுள்ளது.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டங்களை நடத்தி வருகிறன. பாஜக சார்பில் குடியுரிமைச் சட்ட ஆதரவு பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ள சிவசேனா திடீரென குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளது.
இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் இடம்பெற்றுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
‘‘பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வந்த இஸ்லாமியர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. சிவசேனா எப்போதும் இந்துத்துவ கொள்கைகளுக்ககாக போராடும். அதில் எந்த மாற்றமும் இல்லை. குடியுரிமைச் சட்டம் சரியான முறையில் உருவாக்கப்படவில்லை. அவற்றை சரி செய்ய வேண்டும்’’ என சிவசேனா கூறி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT